என்னாகுமோ ஏழையின் கல்வி?


கோட்டை நோக்கி ஒரு பேரணி புறப்பட்டது. பேரணியில் பங்கேற்றவர்கள் ந்திய  மாணவர் முன்னணி(SFI)யைச் சார்ந்த இளம் பெண்களும் ஆண்களும். கோட்டை நோக்கி பேரணி செல்வதற்கு இசைவு இல்லை எனக் கூறி காவல்துறையினர் தடுக்க, தடையை மீறி கோட்டை நோக்கி முன்னேற பேரணியில் பங்கேற்றவர்கள் முயல, வழக்கம்போல் தடியடி நடத்தப்படுகிறது. பங்கேற்பாளர்கள் சிதறி ஓடத் தொடங்குகிறார்கள். தடியடியில் காயம் பட்ட இளம் பெண்களும், ஆண்களும் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள்.

            தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, ‘சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த அரசை வலியுறுத்தி நடத்தப்பட்ட பேரணியில் நடைபெற்ற நிகழ்வுகளே மேற்சொன்னவை. மீண்டும் ஒருமுறை சமச்சீர் கல்வி பற்றிய குரல்கள் தமிழகமெங்கும் எதிரொலித்த. சட்டமன்றத்திலும் இது தொடர்பாக பல்வேறு குரல்கள் ஒலித்தன. மறுநாள் முதல்வர் பேரவையில் அறிக்கை ஒன்றினை அளித்தார்.

            சமச்சீர் கல்வி முறை தொடர்பாக முனைவர் முத்துக்குமரன் குழு அளித்துள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து மூத்த இ.அ.ப. அதிகாரியான எம்.பி. விசயகுமாரைக் கொண்டு ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவருக்கு உதவ மாநிலத் திட்டக் குழுவும் கேட்டுக் கொள்ளப்பட்டுளது. இந்தக் குழுவின் அறிக்கை வந்ததும் அதை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது என்று முதல்வர் வெளியிட்ட கேள்வியும் நானே பதிலும் நானே வடிவில் அமைந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

            பள்ளிக் கல்வி அமைச்சரும் தம் பங்கிற்கு வரும் கல்வியாண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.

            ஆள்வோரின் இத்தகைய அறிவிப்புகள் குழப்பத்தையே உண்டாக்குகின்றன. கடந்த பள்ளி இறுதிப் பொதுத்தேர்வுகளில் அனைத்து வகை பாடத் திட்டங்களுக்கும் மொத்த மதிப்பெண்கள் 500 என வரையறை செய்யப்பட்டிருப்பதும் இதனைச் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தும் அரசின் முயற்சியின் முதல்படி என பள்ளிக் கல்வி அமைச்சர் அறிவித்ததும் நினைவிருக்கலாம். அப்படியானால் தற்போதைய அறிவிப்பு இரண்டாம் படியாக அமையுமோ?

            சமச்சீர் கல்வி தொடர்பாக அமைக்கப்பட்ட முனைவர் முத்துக்குமரன் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்காக ஒரு நபர் குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் வெளிவராத நிலையில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கை செய்ய வேண்டியதின் பின்னணி நமக்கு விளங்கவில்லை. இது தொடர்பாக பல்வேறு கேள்விகளும் ஐயங்களும் கல்வியாளர்களிடையேயும் பொது மக்களிடமும் முனைப்பாக எழுந்துள்ளன. அவற்றுள் சில:
  • முனைவர் முத்துக்குமரன் குழு அளித்துள்ள அறிக்கையில் எவை எவை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன? எவை எவை ஏற்றுக் கொள்ளப்படாமல் விலக்கப்பட்டுள்ளன?
  • சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவதற்கான கால அளவு எவ்வளவு?
  • மொழிக் கொள்கை, பயிற்றுமொழி, தாய்மொழி வழிக் கல்வி, தொடர்பு மொழி இவை தொடர்பான அரசின் நிலைப்பாடு என்ன?
  • இப்போதுள்ள நான்கு கல்விக் குமுமங்கள்(வாரியங்கள்) அவ்வாறே தொடருமா? அல்லது கலைக்கப்படுமா?
  • முனைவர் முத்துக்குமரன் குழு அறிக்கையில் கூறியவாறு தமிழ்நாடு மாநில பள்ளிக் (சமச்சீர்) கல்வி வாரியம் அமைக்கப்படுமா?
  • ஒரே கல்விக் குழுமம் உருவாக்கப்பட்டால் மக்களாட்சி நெறிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கு அமைப்பு விதிகள் உருவாக்கி செயல்படுத்தப்படுமா? அல்லது பல்லாயிரம் மாணவரது கல்வி பற்றிய முடிவுகளை அலுவலர்களே எடுத்து செயல்படுத்தும் (அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்ட இயக்குநராக எம்.பி. விசயகுமார், இ.அ.ப. இருந்த போது செயல் வழிகல்வி, படைப்பாற்றல் கல்வி என்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தியது போன்று) நிலைதொடருமா?
  • நடைமுறையில் உள்ள கல்வித்துறை தொடர்பான பல்வேறு வகையான சட்டங்கள், விதிகள், ஆணைகள் போன்றவற்றை முறைப்படுத்தி அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும் வகையில் புதிய கல்விச் சட்டம் உருவாக்கப்படுமா? (பிற மாநிலங்களில் நடுவரசு கல்வி குமுமப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளும் மாநிலச் சட்டத்திற்கும் உட்பட்டுள்ளதை நினைவில் கொள்வோமாக.)
  • ஒரே கல்விக் குமுமம் உருவாக்கப்படும் நிலையில் நிர்வாக செயல்பாடுகள் தடையின்றி நடைபெற மண்டலங்களாக பிரிக்கும் நடைமுறைகளை அரசு பின்பற்றுமா?
  • ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்த வசதியாக புதிய பாடத்திட்டம், பாடநூல் உருவாக்கல் போன்ற பணிகளில் பேரா.யசுபால் மற்றும் சிவஞானம் குழுக்கள் பரிந்துரைத்த வண்ணம் இப்பணிகளில் வகுப்பறைக் கற்பித்தலில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவார்களா? அல்லது சென்ற இரு பாடத்திட்டங்கள் உருவாக்கலிலும், பாடநூல்கள் எழுதுதலிலும் மிக அதிக அளவில் பல்கலைக்கழக, கல்லூரி, மேனிலைப் பள்ளி ஆசிரியர்கள் பொறுப்பேற்றது போன்ற நடைமுறையே தொடருமா?
  • சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்ட பின் தற்போது, நடைமுறையில் உள்ள தொடக்க வகுப்புகளுக்கான செயல்வழிக் கல்வி உயர் தொடக்க வகுப்பகளுக்கான படைப்பாற்றல் கல்வி என்ற கற்றல் - கற்பித்தல் முறைகள் தொடருமா? அவ்வாறு தொடருகின்ற நிலையில் மெட்ரிக்குலேசன், ஒரியண்டல், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளிலும் இக் கற்றல் - கற்பித்தல் முறைகள் விரிவுபடுத்தப்படுமா?
  • பாடத்திட்டங்கள், பாடநூல்கள் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டு, பாடநூல்களின் ஆங்கிலப் படிகளை தமிழில் மொழிபெயர்க்கும் முந்தைய நடைமுறை தொடருமா? அல்லது தரமான பாடநூல்கள் உருவாக்கத்திற்கு முதலில் தமிழில் பாடநூல்கள் எழுதப்பட்டு பின்னர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யவேண்டும் என்ற கல்வியாளர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படுமா?
  • தற்போது நடைமுறையில் உள்ள பொதுத் தேர்வு முறைகள் அவ்வாறே தொடருமா? அல்லது கைவிடப்படுமா?
  • முனைவர் முத்துக்குமரன் குழு வழிகாட்டுதல்படி ஆசிரியர் மாணவர் விகிதம் 1:30 என மாற்றி அமைக்கப்படுமா? அல்லது தற்போதுள்ள 1: 40 என்ற நிலையே நீடிக்குமா?
  • பொதுவாக உயர்நிலைப் பள்ளி இறுதித் தேர்வுக்கு உரிய பாடநூல்கள் மட்டுமே தீர்மானிக்கப்பட்டு மற்ற நிலைகளில் பாடநூல்கள், எந்த முறையில் கற்பிப்பது போன்ற கல்வி சம்பந்தமான எல்லாவற்றையும் பள்ளி நிலையில் ஆசிரியர் குழுவாக அமைத்துத் தீர்மானப்பது, செயல்படுத்துவது என்ற நிலையே சிறப்பானது. மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு இது போன்ற சுதந்திரம் அல்லது தன்னாட்சி செயற்பாடு இப்போது நடைமுறையில் உள்ளது. இதே போன்ற சுதந்திரம் மற்ற எல்லாப் பள்ளிகளுக்கும் அளிப்பது கல்வியில் சமச்சீர் நிலையை உருவாக்கவும், கல்வி மேம்பாட்டுக்கு உதவும். (முனைவர் முத்துக்குமரன் குழு அறிக்கை, பத்தி 12.76) என்ற முனைவர் முத்துக்குமரன் குழுவின் பரிந்துரை செயல்படுத்தப்படுமா?

இந்திய கல்வி முறையை மறுபரிசீலனை செய்த பேரா. டி. எஸ். கோத்தாரி தலைமையிலான கல்வி ஆணையம்(1964-1966) நாட்டில் கல்விப் புரட்சியை ஏற்படுத்த அடிப்படை சிந்தனைகள் மற்றும் தேவையான வரையறையை அளித்தது. கல்வி ஆணையத்தின் முக்கியமான பரிந்துரை என்பது சமூக இணக்கமும், சமூக சமத்துவத்தை வற்புறுத்தும் நோக்கோடு செயல்பட்டு பொதுவான பள்ளி அமைப்பை உருவாக்குதல் ஆகும். கல்வி ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று உருவாக்கப்பட்ட தேசியக் கல்விக் கொள்கை(1968) கல்வி ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட குறிக்கோளான சமுதாய இணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கும் வண்ணம் பொதுவான பள்ளி அமைப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.

1966-ல் ஏற்படுத்தப்பட்ட ஆச்சாரியா இராமமூர்த்திக் குழுவானது தன்னுடைய ஆய்வறிக்கையில் பொதுப்பள்ளி கல்வி முறை(சமச்சீர் கல்வி) என்பதற்கு இதுவரை அடித்தளம் அமையாததற்காக பின்வரும் காரணங்களை குறிப்பிட்டு கூறியுள்ளது.

  • பொருளியல் மற்றும் சமூக வேறுபாடுகள் இருத்தல், நல்ல வசதியான சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளை நல்ல கட்டமைப்புடைய சிறந்த ஆசிரியர்களையும், கற்பிக்கும் முறையில் நல்ல தரங்களையும் கொண்ட பள்ளிகளுக்கு அனுப்புவதால் சாதாராண பள்ளிகளுக்கு அனுப்ப விரும்புவதில்லை. இதன் விளைவாக அவற்றிற்கு  குறைந்த அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.
  • சிறுபான்மையினர்கள் சொந்த கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கும், நிர்வகிப்பதற்கும் அவர்களுக்கு அரசமைப்பு சட்டப்படி பாதுகாப்பு அளிக்கப்படுகின்றது. இதனால் அவர்கள் பொது பள்ளி கல்வி முறை என்பதை ஏற்றுக்கொள்வதில்லை.
  • அரசாங்கப் பள்ளிகளில் கல்வித் தரம் தொடர்ந்து மட்டமானதாகவே இருந்து வருதல்.
  • போதிய ளவிற்கு அரசியல் உறுதி இல்லாதிருத்தல்.
  • நன்கொடை கட்டணங்கள் வசூலிக்கின்ற தனியார் ஆங்கிலப் பள்ளிகளும், அதிக செலவு பிடிக்கக் கூடியதான தனிப்பயிற்சி வகுப்புகளை நடத்துகின்ற பள்ளிகளும் அதிகரித்திருத்தல்.
  • அரசாங்கத் துறையிலான கல்வி நிறுவனங்களில் மாணவர்களில் தனிப்பட்ட பிரிவினருக்காக சைனிக் பள்ளிகள், கேந்திர வித்யாலயா, நவோதயா வித்யாலயா போன்ற பள்ளிகள் தோற்றுவிக்கப்படுதல்.

            மேற்கூறிய காரணங்கள் இன்றளவிலும் எந்தவித மாற்றங்களையும் காணாமல் அவ்வாறே உள்ளன. கல்வி அமைப்பில் உள்ள இத்தகைய தடைகளை களையாமல் உள்ளது உள்ளபடி வைத்துவிட்டு பெயரளவில் சமச்சீர் கல்வி என்ற ஒன்றை நடைமுறைப்படுத்துவதாகக் கூறுவது ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட பல்வேறு கல்வித்திட்டங்கள் போன்று இத்திட்டமும் பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று என்பது போலவே அமையும்.

            உலகளாவிய சந்தை விசைகள், சாதி – சமயக் குழுக்கள், தனியார் நிறுங்கள் போன்றவை தீர்மானிக்காத ஒரு பொதுவான கல்வி முறையை உருவாக்க இந்திய மக்கள் பரந்துபட்ட அளவில் அணி திரள வேண்டிய வேளை இது. இதனை இனங்காட்டுவதாகவே நாம் முதலில் கூறிய நிகழ்வினை எடுத்துக் கொள்வதில் தவறில்லை.   

0 மறுமொழிகள்: