என்ன செய்யப் போகிறோம்?


மாவட்ட ஆசிரியக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினரால்  நடத்தப்பட்ட கருத்தரங்கம் அது. கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள்(பத்துக்கும் குறைவானவர்கள் அதிலும் குமுக ஆர்வலர்கள், தொண்டு நிறுவன ஊழியர்கள் அடக்கம்) என அரங்கம் நிறைந்திருந்தது. காலை பத்து மணியளவில் கருத்தரங்கம் தொடங்கியது. கல்வி அதிகாரிகள்(உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்), பணிநிறைவு கல்வி அதிகாரிகள் என அனைவரும் கருத்தரங்கத்தின் நோக்கத்தைக் குறிப்பிட்டு கருத்தரங்கு சிறப்படைய தங்கள் வாழ்த்துகளைக் கூறி விடைபெற்றார்கள். வழக்கமான இத்தகைய தொடக்க நிகழ்வுகளுக்காக ஒரு மணி நேரம் செலவிடப்பட்டது.

            தொடர்ந்து மாவட்ட ஆசிரியக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் கருத்தரங்கத்தின் நிகழ்வுகள் பற்றிப் பேசத் தொடங்கினார். தொடக்க நிகழ்வுகளுக்கு அதிக நேரம் செலவிடப்பட்டதையும் கல்வி அதிகாரிகளின் உரைவீச்சைக் கட்டுப்படுத்த முடியாத தனது இயலாமையையும் வெளிப்படுத்தினார். கருத்தரங்கத்தின் நிகழ்வுகள் மற்றும் கருத்தாளர்களின் கருத்துகளையும் அன்று மாலையே சென்னைக்கு எடுத்துச் செல்ல வேண்டியுள்ளதால் மதிய வேளைக்கு முன்பாக ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் கருத்துகளைத் தொகுத்து வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

            வருகை தந்திருந்த ஆசிரியர்கள் தொடக்கநிலை, இடைநிலை எனப் பகுக்கப்பட்டனர். குறிப்பிட்ட பாடங்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் தனித்தனியே குழுக்களாக அமர்த்தப்பட்டனர். தொடக்க நிலையில் ஐந்து பாடங்களுக்கென ஐந்து குழுக்களும், இடைநிலையில் ஐந்து பாடங்களுக்கென ஐந்து குழுக்களுமாக மொத்தம் பத்து குழுக்கள் உருவாக்கப்பட்டன.

            தேநீர் இடைவேளைக்குப் பின் 11.30 மணியளவில் இரண்டாம் அமர்வு தொடங்கியது. ஒவ்வொரு குழுவும் தத்தமக்கு வழங்கப்பட்ட பணியை செவ்வனே செய்யத் தொடங்கினர். வழங்கப்பட்ட படிவத்தில் உரிய முறையில் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர். மதிய இடைவேளைக்குப்பின் ஒவ்வொரு குழுவும் தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று பணிக்கப்பட்டனர். பொது மக்களுக்கும் தங்கள் கருத்துகளைக் கூற வாய்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

            மதிய இடைவேளைக்குப் பின்னர் மூன்றாம் அமர்வு தொடங்கியது. முதன்மைக் கல்வி அலுவலர் வருகை புரிந்திருந்தார். கருத்தரங்கின் பொருள் வரைவினை தான் முழுமையாகப் படிக்கவில்லை என்றும் மேலோட்டமாகவே பார்க்க முடிந்ததாகவும் தெரிவித்தார். கருத்தரங்கில் பங்கேற்றுள்ள அனைவரும் அதனை முழுமையாக ஆய்வுசெய்திருப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

            பொதுமக்கள் தங்கள் கருத்துகளைக் கூற அழைக்கப்பட்டனர். ஒன்றிரண்டு பேர் தங்களுக்குத் தெரிந்த ஏதேதோ கருத்துக்களைக் கூறினர். அவை எதுவும் பதிவுசெய்யப்பட்டதாகத் தெரியவில்லை. தொடர்ந்து ஆசிரியர்களின் கருத்துகளை முதன்மைக் கல்வி அலுவலர் வினவினார். ஆசிரியர் ஒருவர் முன்வந்து தனது கருத்தினைக் கூறினார். உடனே குறுக்கிட்ட மா.ஆ.க.ப.நி. முதல்வர், ஆசிரியர்கள் தாங்கள் ஆய்வு செய்த பகுதியில் மட்டுமே கருத்து தெரிவிக்க வேண்டும். பொதுவான தங்களின் கருத்துகளைக் கூற அனுமதியில்லை என்று தடுத்துவிட்டார். சற்றேறக்குறைய 3 மணியளவில் ஆசிரியர்கள் தங்கள் கருத்துகளைக் கூறி முடித்திருந்தனர். கருத்துப் படிவங்கள் முறையாகப் பெறப்பட்டு சென்னை செல்ல ஆயத்தமாக இருந்தவர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

            தேநீர் இடைவேளைக்குப் பின்பு வந்திருந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் வருகைச் சான்று, பயணப்படி, மதிப்புறு ஊதியம் வழங்கப்பட்டது. மாலை 4.30 மணியளவில் கருத்தரங்கம் இனிதே நிறைவெய்தியது.

            சமச்சீர் கல்வியை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள பொது பாடத்திட்ட வரைவு குறித்த கருத்தரங்கு ஒன்றில் நடைபெற்ற நிகழ்வுகளே நாம் மேலே தந்துள்ளது.

            சமச்சீர் கல்வி தொடர்பாக முனைவர் முத்துக்குமரன் குழு அளித்துள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு அறிக்கை வெளியிடப்படாத நிலையில், வரும் கல்வியாண்டு முதல் சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வருவதாக அரசு அறிவித்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. சமச்சீர் கல்வி தொடர்பாகவும், முனைவர் முத்துக்குமரன் குழு அறிக்கை மீதும் பல்வேறு கேள்விகளும் ஐயங்களும் கல்வியாளர்களாலும் பொதுமக்களாலும் எழுப்பப்பட்டு(விரிவுக்கு கட்டுரையாளர் அக். 2009 தமிழினி இதழில் எழுதியுள்ள என்னாகுமோ ஏழையின் கல்வி என்ற கட்டுரையைப் பார்க்க) அதற்கான விடைகள் தெரியாத நிலையில், சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த பொது பாடத்திட்ட வரைவு வெளியிடப்பட்டுள்ளது.

            பொது பாடத் திட்ட வரைவு வெளியான ஓரிரு நாள்களுக்குள்ளாக தமிழகத்தின்  அனைத்து மாவட்டங்களிலும், பொது பாடத்திட்ட வரைவு - கருத்தரங்குகள்  நடத்தப்பட்டன. கருத்தரங்கில் கலந்துகொண்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் எனப் பலரும் பாடத் திட்ட வரைவினை படித்திருக்கவில்லை. மேற்கூறிய கருத்தரங்கில் பங்கேற்ற கட்டுரையாளர் தவிர வேறு எந்த ஆசிரியரும் பொது பாடத்திட்ட வரைவினைப் பார்த்திருக்கவில்லை. (முன்னரே வழங்கப்பட்டு கருத்து, கூற பணிக்கப்பாட்டாலே பெருபான்மை ஆசிரியர்கள் அதற்கு முகாமை வழங்காத சூழலில், இணையத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ள வரைவை வேலை வினைகெட்டு பதிவிறக்கம் செய்து படிப்பார்கள் போலும்!). கருத்தரங்கில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் அனைவரும் கல்வி அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டவர்கள். தானா விரும்பி கலந்துகொண்டவர்களில் கட்டுரையாளர் மட்டுமே  ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. ஓரிரு தொண்டு நிறுவன ஊழியர்களும் குமுக ஆர்வலர்களும் தங்கள் வருகையை பதிவு செய்துவிட்டுச் சென்றுவிட்டனர்.

            பொது பாடத்திட்ட வரைவு நகல்கள் ஒன்றிரண்டினை கருத்தரங்க ஏற்பாட்டாளர்கள் கொண்டுவந்திருந்தனர். அவற்றை ஒவ்வொரு குழுவுக்கும் பகுதி பகுதியாக பிரித்து வழங்கினர். இவ்வாறு ஒன்று முதல் பத்து வகுப்புகள் வரை ஒரு மாணவனுக்கு வழங்கப்பட வேண்டிய பாடப்பொருளை உள்ளடக்கிய பொது பாடத்திட்ட வரைவு ஏறக்குறைய 2 மணி நேரத்திற்குள் ஆய்வு செய்து முடிக்கப்பட்டுவிட்டது.

            ஒவ்வொரு ஐந்து முதல் பத்து ஆண்டுகளிலும் பாடப் புத்தகங்கள் மாற்றப்படுவது வழக்கமான நடைமுறையாக உள்ளது. சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பாடப்புத்தகங்கள் மாற்றப்படுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

            பாடப் புத்தகங்கள் மாற்றப்படும் போது, அன்றைய சூழலுக்கு ஏற்ப கலைத்திட்டம்(Carriculam) உருவாக்கப்படும். கலைத்திட்டம் என்பது பள்ளிகளில் உள்ள பாடச் செயல்கள், வகுப்பறைப் பட்டறிவுகள், வகுப்பறைக்கு வெளியே கற்கும் பாட இணைச் செயல்கள், அவற்றால் ஏற்படும் பட்டறிவுகள் ஆகிய அனைத்தும் அடங்கியது. தமிழகப் பள்ளிகளில் நடைமுறையில் உள்ள கலைத்திட்டத்தில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், குமுக அறிவியல், உடற்கல்வி போன்ற பாடங்கள் இடம்பெற்றுள்ளன.

            மாணவர்களின் பல்வேறு பயன் கருதியே பள்ளிக் கலைத்திட்டத்தில் பாடங்கள் உருவாக்கப்படுகின்றன. பாடங்களால் பெறப்படும் பயன்களை வாழ்க்கைப் பயன்கள், குமுகப் பயன்கள், அறநெறிப் பயன்கள், பண்பாட்டுப் பயன்கள், பொழுதுபோக்கு/ஓய்வுப் பயன்கள், தொழிற்பயன்கள் என பலவாறாக கூறலாம்.

            கலைத்திட்டம் இறுதி செய்யப்பட்ட பின்பு, ஒன்று முதல் பத்து வகுப்புகளுக்கு வழங்க வேண்டிய பாடப் பொருள்களை வரையறுத்து பாடத்திட்டம் உருவாக்கப்படும். பாடத்திட்ட வரைவு அரசிதழில் வெளியிடப்படும். அதன் நகல்கள் பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்படும். பொதுமக்கள் அரசு அச்சகத்தினின்று வாங்கிக் கொள்ளவும் வகை செய்யப்பட்டிருக்கும். அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க மூன்று மாத கால இடைவெளி தரப்படும். பெறப்பட்ட கருத்துகளை அதற்கென அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவினர் ஆய்வு செய்து ஏற்கத்தக்கவை, ஏற்கப்படாதவை ஏற்கப்படாததற்கான காரணங்கள் போன்றவற்றைத் தொகுத்து அரசுக்குப் பரிந்துரைப்பர். அதன்படி பாடத்திட்டம் இறுதி செய்யப்படும்.

            இறுதி செய்யப்படும் பாடத்திட்டத்தின் அடிப்படையில் பாடப்புத்தகங்கள் எழுதுவதற்கு குழுக்கள் ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு பாடத்திற்கும் வகுப்பிற்கும் தனித்தனியே நூலாசிரியர்கள், மேலாய்வாளர்கள் அடங்கிய குழுக்கள் இப்பணியை  மேற்கொள்வர். இவ்வாறு புதிய பாடப்புத்தகங்கள் உருவாக்கப்படும் நடைமுறை அமைந்திருக்கும்.

            அண்மையில் வெளியிடப்பட்டுள்ள பொது பாடத்திட்ட வரைவு உருவாக்குவதற்கு மேற்சொன்ன நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை. கலைத்திட்டம் உருவாக்கப்படாமல் பாடத்திட்டம் மட்டும் உருவாக்கி வெளியிடுவது என்பது கதை உருவாகுவதற்கு முன்பே திரைக்கதை எழுதுவது போன்றது என்றால் மிகையில்லை. வெளியிடப்பட்டுள்ள பாடத்திட்டத்தில் தேசிய கலைத்திட்ட வரைவு(National Corriculam Framework) 2005 வழிகாட்டியாகக் கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தேசியக் கல்விக் கொள்கை-1986 உருவாக்கப்பட்ட பின்பு இத்தகையதொரு நடவடிக்கையை அரசு பின்பற்றி வருவதாகத் தெரிகிறது. இதற்கு முந்தைய பாடத்திட்ட உருவாக்கத்திலும் இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டிருக்கிறது.

            தேசிய கலைத்திட்ட வரைவு என்பது நாடு முழுமைக்குமான கல்வி ஏற்பாட்டினைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்படுவதாகும். அதனை நமது சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டியது இன்றியமையாதது. இந்நிலையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தில், தேசிய கலைத்திட வரைவு அப்படியே பின்பற்றப்பட்டுள்ளதா, நமது குமுகச் சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது யாரும் அறியாத கமுக்கமே.

            தேசிய கலைத்திட்ட வரைவை எந்தவொரு மாற்றமும் செய்யாமல் அப்படியே பின்பற்றுவதாகக் கொண்டாலும் அதனை பொது பாடத்திட்ட வரைவுடன் அனைவரது பார்வைக்கும் தந்திருக்க வேண்டும். அவ்வாறு தரப்படாத நிலையில் நமக்கு ஏற்படும் ஐயம் நியாயமானதே. பாடத்திட்டங்களில் காணப்படும் பாடப் பொருள் சார்ந்த ஒருங்கிணைப்பின்மை நமது ஐயத்திற்கு வலு சேர்ப்பதாக உள்ளது.

            மாணவர்களுக்கு வழங்க வேண்டிய முழுமையான கல்வி பற்றிய கலைத்திட்டம் இல்லாத நிலையில் பாடத்திட்ட வரைவு பற்றிய ஆய்வுகள், கருத்துக் கேட்பு நிகழ்வுகள், கருத்தரங்கங்கள் எல்லாம் வானத்தில் சிலம்பம் செய்வது போன்றதே.

            இவ்வளவு இடையூறுகளுக்கு நடுவில் பொது பாடத்திட்ட வரைவினை படிக்கின்ற நிலையில் பின்வரும் குறைகள் முதன்மை பெறுகின்றன.

  • பொதுப் பாடத்திட்ட வரைவு அரக்கப் பரக்க உருவாக்கப்பட்டுள்ளது.
  • வரைவு ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
  • தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், குமுக அறிவியல் பாடங்களுக்கு மட்டுமே பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
  • உடற்கல்வி, கணினி அறிவியல், அறிவியல் தமிழ், சுற்றுச்சூழல் கல்வி, இசை, ஓவியம், விவசாயம், நெசவு, தையல் போன்ற பாடங்களுக்கு பாடத்திட்டம் வெளியிடப்படவில்லை.
  • தமிழ் மொழிக்கான முகாமை குறைக்கப்பட்டு மூன்றாவது மொழியாக கற்பிக்கத் தகுந்தகுந்த வகையிலே பாடப்பொருள்வைப்பு உள்ளது.
  • குமுக அறிவியல் பாடத்தில் தமிழக வரலாற்றின் முகாமை குறைக்கப்பட்டுள்ளது.
  • தொடக்க நிலைக்கான சூழ்நிலையியல் பாடத்திட்டத்தில் வழக்கமாக  இடம்பெறும் மாவட்ட வரலாறு கழிக்கப்பட்டுள்ளது.
  • சிறுபான்மை மொழிகள் மற்றும் கீழ்த்திசை மொழிகளுக்கான பாடத்திட்டம்  வெளியிடப்படவில்லை.
  • பதின்ம(மெட்ரிக்)ப் பள்ளிகளில் பின்பற்றப்படும் பொருளியல் பற்றிய பாடப்பொருள் குமுக அறிவியல் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.
  • ஒவ்வொரு பாடத்திட்டத்துக்கும் இடையே ஒருங்கமைவு காணப்படவில்லை; பாடத்திட்டங்கள் வெவ்வேறு வகையான கட்டமைப்பைக் கொண்டுள்ளன.

எதிர்கால குமுகச் சவால்களை வளர்ந்துவரும் தலைமுறை எதிர்கொள்ளத் தேவைப்படும் ஆற்றல் பற்றியோ, குமுகம் சார்ந்த இன்றைய தேவைகளை உள்வாங்கிக் கொண்டு மாணவர்களிடம் அதனை வளர்த்தெடுக்க வேண்டிய  தேவை பற்றியோ எந்த சிந்தனையும் இல்லாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற மனநிலையில் பாடத்திட்ட வரைவு அமைந்துள்ளது. குமுக வளர்ச்சிக்கு அடித்தளம் அமைப்பதான கல்வியின் நோக்கத்தைத் தனிமனித மேன்பாட்டுக்கான கல்வி என்பதாக சுருக்கிக் கொள்வதாக பொதுப் பாடத்திட்ட வரைவு உள்ளது.

தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்(NCERT) ஓராண்டுக்கு மேல் எடுத்துக்கொண்ட பணியைச்  சில நாட்களில் பதினைந்து நாட்களில் பாடத்திட்டம் உருவாக்கல், இணையத்தில் வெளியிடல், ஏழு நாட்களில் மக்கள் கருத்தறிதல், ஓரிரு நாட்களில் பாடத்திட்டத்தை இறுதி செய்து பாடநூல்கள் எழுதத் தொடங்கிவிடல் என்று பெருமை அடித்துக் கொள்வதற்காக மாநிலக் கல்வித்துறை இதனைச் செய்வது போல் தெரியவில்லை. 1986இல் இராசீவு காந்தி கல்வித்துறையை அடித்தள மக்களிடமிருந்து பிடுங்கி அயல்நாடுகளுக்கும் உலகளாவுதலுக்கும் ஏற்ப மாற்றியமைத்துத் தொடங்கி வைத்த நிகழ்முறையின் படிமுறை வளர்ச்சிதான் இது என்பதில் ஐயமில்லை. இவ்வாறு மக்களைத் தொட்டு நிற்கும் மாநில அரசுகளிடமிருந்து அவற்றுக்குக் கொஞ்ச நஞ்சமிருந்த அதிகாரங்களும் பிடுங்கப்பட்டுவிட்டன. மக்களின் மொழிகள் குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்டுள்ளன. கல்விக்காகச் செலவிடப்படும் பல்லாயிரம் கோடிப் பணம் உள்நாட்டுக்குப் பயன்படப் போவதில்லை.

என்ன செய்யப் போகிறோம்? 

என்னாகுமோ ஏழையின் கல்வி?


கோட்டை நோக்கி ஒரு பேரணி புறப்பட்டது. பேரணியில் பங்கேற்றவர்கள் ந்திய  மாணவர் முன்னணி(SFI)யைச் சார்ந்த இளம் பெண்களும் ஆண்களும். கோட்டை நோக்கி பேரணி செல்வதற்கு இசைவு இல்லை எனக் கூறி காவல்துறையினர் தடுக்க, தடையை மீறி கோட்டை நோக்கி முன்னேற பேரணியில் பங்கேற்றவர்கள் முயல, வழக்கம்போல் தடியடி நடத்தப்படுகிறது. பங்கேற்பாளர்கள் சிதறி ஓடத் தொடங்குகிறார்கள். தடியடியில் காயம் பட்ட இளம் பெண்களும், ஆண்களும் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள்.

            தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, ‘சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த அரசை வலியுறுத்தி நடத்தப்பட்ட பேரணியில் நடைபெற்ற நிகழ்வுகளே மேற்சொன்னவை. மீண்டும் ஒருமுறை சமச்சீர் கல்வி பற்றிய குரல்கள் தமிழகமெங்கும் எதிரொலித்த. சட்டமன்றத்திலும் இது தொடர்பாக பல்வேறு குரல்கள் ஒலித்தன. மறுநாள் முதல்வர் பேரவையில் அறிக்கை ஒன்றினை அளித்தார்.

            சமச்சீர் கல்வி முறை தொடர்பாக முனைவர் முத்துக்குமரன் குழு அளித்துள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து மூத்த இ.அ.ப. அதிகாரியான எம்.பி. விசயகுமாரைக் கொண்டு ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவருக்கு உதவ மாநிலத் திட்டக் குழுவும் கேட்டுக் கொள்ளப்பட்டுளது. இந்தக் குழுவின் அறிக்கை வந்ததும் அதை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது என்று முதல்வர் வெளியிட்ட கேள்வியும் நானே பதிலும் நானே வடிவில் அமைந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

            பள்ளிக் கல்வி அமைச்சரும் தம் பங்கிற்கு வரும் கல்வியாண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.

            ஆள்வோரின் இத்தகைய அறிவிப்புகள் குழப்பத்தையே உண்டாக்குகின்றன. கடந்த பள்ளி இறுதிப் பொதுத்தேர்வுகளில் அனைத்து வகை பாடத் திட்டங்களுக்கும் மொத்த மதிப்பெண்கள் 500 என வரையறை செய்யப்பட்டிருப்பதும் இதனைச் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தும் அரசின் முயற்சியின் முதல்படி என பள்ளிக் கல்வி அமைச்சர் அறிவித்ததும் நினைவிருக்கலாம். அப்படியானால் தற்போதைய அறிவிப்பு இரண்டாம் படியாக அமையுமோ?

            சமச்சீர் கல்வி தொடர்பாக அமைக்கப்பட்ட முனைவர் முத்துக்குமரன் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்காக ஒரு நபர் குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் வெளிவராத நிலையில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கை செய்ய வேண்டியதின் பின்னணி நமக்கு விளங்கவில்லை. இது தொடர்பாக பல்வேறு கேள்விகளும் ஐயங்களும் கல்வியாளர்களிடையேயும் பொது மக்களிடமும் முனைப்பாக எழுந்துள்ளன. அவற்றுள் சில:
  • முனைவர் முத்துக்குமரன் குழு அளித்துள்ள அறிக்கையில் எவை எவை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன? எவை எவை ஏற்றுக் கொள்ளப்படாமல் விலக்கப்பட்டுள்ளன?
  • சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவதற்கான கால அளவு எவ்வளவு?
  • மொழிக் கொள்கை, பயிற்றுமொழி, தாய்மொழி வழிக் கல்வி, தொடர்பு மொழி இவை தொடர்பான அரசின் நிலைப்பாடு என்ன?
  • இப்போதுள்ள நான்கு கல்விக் குமுமங்கள்(வாரியங்கள்) அவ்வாறே தொடருமா? அல்லது கலைக்கப்படுமா?
  • முனைவர் முத்துக்குமரன் குழு அறிக்கையில் கூறியவாறு தமிழ்நாடு மாநில பள்ளிக் (சமச்சீர்) கல்வி வாரியம் அமைக்கப்படுமா?
  • ஒரே கல்விக் குழுமம் உருவாக்கப்பட்டால் மக்களாட்சி நெறிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கு அமைப்பு விதிகள் உருவாக்கி செயல்படுத்தப்படுமா? அல்லது பல்லாயிரம் மாணவரது கல்வி பற்றிய முடிவுகளை அலுவலர்களே எடுத்து செயல்படுத்தும் (அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்ட இயக்குநராக எம்.பி. விசயகுமார், இ.அ.ப. இருந்த போது செயல் வழிகல்வி, படைப்பாற்றல் கல்வி என்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தியது போன்று) நிலைதொடருமா?
  • நடைமுறையில் உள்ள கல்வித்துறை தொடர்பான பல்வேறு வகையான சட்டங்கள், விதிகள், ஆணைகள் போன்றவற்றை முறைப்படுத்தி அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும் வகையில் புதிய கல்விச் சட்டம் உருவாக்கப்படுமா? (பிற மாநிலங்களில் நடுவரசு கல்வி குமுமப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளும் மாநிலச் சட்டத்திற்கும் உட்பட்டுள்ளதை நினைவில் கொள்வோமாக.)
  • ஒரே கல்விக் குமுமம் உருவாக்கப்படும் நிலையில் நிர்வாக செயல்பாடுகள் தடையின்றி நடைபெற மண்டலங்களாக பிரிக்கும் நடைமுறைகளை அரசு பின்பற்றுமா?
  • ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்த வசதியாக புதிய பாடத்திட்டம், பாடநூல் உருவாக்கல் போன்ற பணிகளில் பேரா.யசுபால் மற்றும் சிவஞானம் குழுக்கள் பரிந்துரைத்த வண்ணம் இப்பணிகளில் வகுப்பறைக் கற்பித்தலில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவார்களா? அல்லது சென்ற இரு பாடத்திட்டங்கள் உருவாக்கலிலும், பாடநூல்கள் எழுதுதலிலும் மிக அதிக அளவில் பல்கலைக்கழக, கல்லூரி, மேனிலைப் பள்ளி ஆசிரியர்கள் பொறுப்பேற்றது போன்ற நடைமுறையே தொடருமா?
  • சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்ட பின் தற்போது, நடைமுறையில் உள்ள தொடக்க வகுப்புகளுக்கான செயல்வழிக் கல்வி உயர் தொடக்க வகுப்பகளுக்கான படைப்பாற்றல் கல்வி என்ற கற்றல் - கற்பித்தல் முறைகள் தொடருமா? அவ்வாறு தொடருகின்ற நிலையில் மெட்ரிக்குலேசன், ஒரியண்டல், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளிலும் இக் கற்றல் - கற்பித்தல் முறைகள் விரிவுபடுத்தப்படுமா?
  • பாடத்திட்டங்கள், பாடநூல்கள் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டு, பாடநூல்களின் ஆங்கிலப் படிகளை தமிழில் மொழிபெயர்க்கும் முந்தைய நடைமுறை தொடருமா? அல்லது தரமான பாடநூல்கள் உருவாக்கத்திற்கு முதலில் தமிழில் பாடநூல்கள் எழுதப்பட்டு பின்னர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யவேண்டும் என்ற கல்வியாளர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படுமா?
  • தற்போது நடைமுறையில் உள்ள பொதுத் தேர்வு முறைகள் அவ்வாறே தொடருமா? அல்லது கைவிடப்படுமா?
  • முனைவர் முத்துக்குமரன் குழு வழிகாட்டுதல்படி ஆசிரியர் மாணவர் விகிதம் 1:30 என மாற்றி அமைக்கப்படுமா? அல்லது தற்போதுள்ள 1: 40 என்ற நிலையே நீடிக்குமா?
  • பொதுவாக உயர்நிலைப் பள்ளி இறுதித் தேர்வுக்கு உரிய பாடநூல்கள் மட்டுமே தீர்மானிக்கப்பட்டு மற்ற நிலைகளில் பாடநூல்கள், எந்த முறையில் கற்பிப்பது போன்ற கல்வி சம்பந்தமான எல்லாவற்றையும் பள்ளி நிலையில் ஆசிரியர் குழுவாக அமைத்துத் தீர்மானப்பது, செயல்படுத்துவது என்ற நிலையே சிறப்பானது. மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு இது போன்ற சுதந்திரம் அல்லது தன்னாட்சி செயற்பாடு இப்போது நடைமுறையில் உள்ளது. இதே போன்ற சுதந்திரம் மற்ற எல்லாப் பள்ளிகளுக்கும் அளிப்பது கல்வியில் சமச்சீர் நிலையை உருவாக்கவும், கல்வி மேம்பாட்டுக்கு உதவும். (முனைவர் முத்துக்குமரன் குழு அறிக்கை, பத்தி 12.76) என்ற முனைவர் முத்துக்குமரன் குழுவின் பரிந்துரை செயல்படுத்தப்படுமா?

இந்திய கல்வி முறையை மறுபரிசீலனை செய்த பேரா. டி. எஸ். கோத்தாரி தலைமையிலான கல்வி ஆணையம்(1964-1966) நாட்டில் கல்விப் புரட்சியை ஏற்படுத்த அடிப்படை சிந்தனைகள் மற்றும் தேவையான வரையறையை அளித்தது. கல்வி ஆணையத்தின் முக்கியமான பரிந்துரை என்பது சமூக இணக்கமும், சமூக சமத்துவத்தை வற்புறுத்தும் நோக்கோடு செயல்பட்டு பொதுவான பள்ளி அமைப்பை உருவாக்குதல் ஆகும். கல்வி ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று உருவாக்கப்பட்ட தேசியக் கல்விக் கொள்கை(1968) கல்வி ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட குறிக்கோளான சமுதாய இணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கும் வண்ணம் பொதுவான பள்ளி அமைப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.

1966-ல் ஏற்படுத்தப்பட்ட ஆச்சாரியா இராமமூர்த்திக் குழுவானது தன்னுடைய ஆய்வறிக்கையில் பொதுப்பள்ளி கல்வி முறை(சமச்சீர் கல்வி) என்பதற்கு இதுவரை அடித்தளம் அமையாததற்காக பின்வரும் காரணங்களை குறிப்பிட்டு கூறியுள்ளது.

  • பொருளியல் மற்றும் சமூக வேறுபாடுகள் இருத்தல், நல்ல வசதியான சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளை நல்ல கட்டமைப்புடைய சிறந்த ஆசிரியர்களையும், கற்பிக்கும் முறையில் நல்ல தரங்களையும் கொண்ட பள்ளிகளுக்கு அனுப்புவதால் சாதாராண பள்ளிகளுக்கு அனுப்ப விரும்புவதில்லை. இதன் விளைவாக அவற்றிற்கு  குறைந்த அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.
  • சிறுபான்மையினர்கள் சொந்த கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கும், நிர்வகிப்பதற்கும் அவர்களுக்கு அரசமைப்பு சட்டப்படி பாதுகாப்பு அளிக்கப்படுகின்றது. இதனால் அவர்கள் பொது பள்ளி கல்வி முறை என்பதை ஏற்றுக்கொள்வதில்லை.
  • அரசாங்கப் பள்ளிகளில் கல்வித் தரம் தொடர்ந்து மட்டமானதாகவே இருந்து வருதல்.
  • போதிய ளவிற்கு அரசியல் உறுதி இல்லாதிருத்தல்.
  • நன்கொடை கட்டணங்கள் வசூலிக்கின்ற தனியார் ஆங்கிலப் பள்ளிகளும், அதிக செலவு பிடிக்கக் கூடியதான தனிப்பயிற்சி வகுப்புகளை நடத்துகின்ற பள்ளிகளும் அதிகரித்திருத்தல்.
  • அரசாங்கத் துறையிலான கல்வி நிறுவனங்களில் மாணவர்களில் தனிப்பட்ட பிரிவினருக்காக சைனிக் பள்ளிகள், கேந்திர வித்யாலயா, நவோதயா வித்யாலயா போன்ற பள்ளிகள் தோற்றுவிக்கப்படுதல்.

            மேற்கூறிய காரணங்கள் இன்றளவிலும் எந்தவித மாற்றங்களையும் காணாமல் அவ்வாறே உள்ளன. கல்வி அமைப்பில் உள்ள இத்தகைய தடைகளை களையாமல் உள்ளது உள்ளபடி வைத்துவிட்டு பெயரளவில் சமச்சீர் கல்வி என்ற ஒன்றை நடைமுறைப்படுத்துவதாகக் கூறுவது ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட பல்வேறு கல்வித்திட்டங்கள் போன்று இத்திட்டமும் பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று என்பது போலவே அமையும்.

            உலகளாவிய சந்தை விசைகள், சாதி – சமயக் குழுக்கள், தனியார் நிறுங்கள் போன்றவை தீர்மானிக்காத ஒரு பொதுவான கல்வி முறையை உருவாக்க இந்திய மக்கள் பரந்துபட்ட அளவில் அணி திரள வேண்டிய வேளை இது. இதனை இனங்காட்டுவதாகவே நாம் முதலில் கூறிய நிகழ்வினை எடுத்துக் கொள்வதில் தவறில்லை.   

படைப்பாற்றல் கல்வி

சில நாட்களுக்கு முன் நண்பர் ஒருவர் என்னை சந்திக்க வந்தார். நலம் பாராட்டலுக்குப் பின் எங்கள் உரையாடல் கல்வியை நோக்கித் திரும்பியது. இன்றைய கல்விமுறையின் போக்குகள், வளர்ந்து வரும் உலகில் வெடித்துச் சிதறும் அறிவு ஜீவிப் போக்குப் பற்றியதாக உரையாடல் தொடர்ந்தது. உரையாடலில் நடுவே நண்பர் சில மாதங்களுக்கு முன் கண்ணுற்ற தொலைக்காட்சி கல்வி ஒளிபரப்பு பற்றி தனக்கு ஏற்பட்ட ஐயத்தினை வினவினார்.

மாநில ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான அந்நிகழ்ச்சியில் இடம் பெற்றிருந்தது எட்டாம் வகுப்பு அறிவியல் பாடம் கற்பித்தல். ‘காற்று’ என்ற பாடப்பகுதியை ஆசிரியர் அறிமுகம் செய்தார்.

“வளிமண்டலம் என்பது புவியின் மேற்பரப்பில் தடித்தக் கூடுபோல் சூழ்ந்துள்ள காற்று ஆகும். காற்று பல வாயுக்கள் கலந்துள்ள ஒரு கலவை ஆகும். நாம் வளிமண்டலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காற்றின் இயைபு மற்றும் அதன் வெப்பநிலை ஆகியவை வளிமண்டலத்தின் மேலே செல்லச் செல்ல உயரத்திற்கு ஏற்ப மாறுபடும். வளிமண்டலம் நான்கு முக்கிய அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை: 1. டிரோபோசுபியர், 2. டிரேட்டோசுபியர், 3. மீசோசுபியர் மற்றும் 4. தெர்மோசுபியர் எனப்படும்.

“டிரோபோசுபியர் எனப்படும் அடுக்கில் நாம் வாழ்கிறோம். இது புவியில் மேற்பரப்பிலிருந்து 10 கி.மீ. உயரம் வரை விரிந்திருக்கும். இதுவே வளிமண்டலத்தின் அடர்த்தி மிகுந்த அடுக்காகும். இந்த அடுக்கில் உயரம் அதிகரிக்க அதிகரிக்க வெப்பநிலை குறைகிறது. ஒவ்வொரு கி.மீ. உயரத்திற்கும் வெப்பநிலையில் 6° செல்சியசு குறைவு ஏற்படுகிறது.

“டிரேட்டோசுபியர் என்பது வளிமண்டலத்தின் இரண்டாவது அடுக்கு ஆகும். இது புவியின் மேற்பரப்பிலிருந்து 10 கி.மீட்டருக்கும் - 50 கி.மீட்டருக்கும் இடைப்பட்ட உயரத்தில் உள்ளது. மூன்றாவது அடுக்காகிய மீசோசுபியர் 50 - 80 கி.மீட்டர் வரை விரிந்துள்ளது. இங்கே வெப்பநிலையானது கீழே உள்ள மற்ற அடுக்குகளைக் காட்டிலும் குறைவாகக் காணப்படுகிறது. தெர்மோசுபியர் 80 கி.மீட்டருக்கும் மேலே காணப்படுகிறது. இது ஒரு சூடான காற்றுப்பகுதியாகும்.”

ஆசிரியர் பாட அறிமுகத்தைத் தொடர்ந்து மாணவர்களை பாடப் புத்தகத்தில் உள்ள காற்று என்ற பாடப்பகுதியை வாசிக்குமாறு பணித்தார். ஆசிரியர் வழிக்காட்டுதலுடன் மாணவர்கள் பாடத்தினை வாசிக்க முற்பட்டனர். மாணவர்கள் தங்களுக்குப் புரியாத சொற்களை அடிக்கோடிடுமாறு ஆசிரியர் வழிகாட்டினார். தொடர்ந்து மாணவர்கள் ஆசிரியரின் கட்டளைப்படி மனவரைபடம் வரைய முற்பட்டனர். மனவரைபடம் வரைந்த பின்னர் மாணவர்கள் தங்கள் மன வரைபடத்தினை வகுப்பறையில் மாணவர்களுக்கு அறிமுகம் செய்தனர். தொடர்ந்து ஆசிரியர் தனது மனவரைபடத்தை மாணவர்களுக்குக் காட்டி விளக்கினார்.

ஆசிரியரின் மனவரைபடம் இவ்வாறாக அமைந்திருந்தது. ஒரு காளை மாட்டின் படம் வரையப்பட்டிருந்தது. அம்மாடு காற்று என்பதாக உருவகம் செய்யப்பட்டிருந்தது. வளிமண்டல அடுக்குகளாகக் கூறப்பட்ட டிரோபோசுபியர், டிரேட்டோசுபியர், மீசோசுபியர் மற்றும் தெர்மோசுபியர் என்பவை அந்த காளை மாட்டின் கால்களாக அடையாளப் படுத்தப்பட்டிருந்தன.

நண்பர் என்னிடம் வினவிய கேள்விகள் இவைதான். வளிமண்டலத்தின் நான்கு அடுக்குகளாகக் கூறப்படுபவை ‘மனவரைபடம்’ என ஆசிரியர் காட்டிய படத்தில் காற்றினைத் தாங்கும் தூண்களாக உருவகப்படுத்தப் பட்டிருந்ததே அது ஏன்? ‘காற்று’ என்ற பொருளை ஆசிரியர் தெளிவாகவே அறிமுகம் செய்தார். தொடர்ந்து மாணவர்கள் புத்தகத்தின் மூலம் வாசித்து வளிமண்டல அடுக்குகள் பற்றி புரிந்து கொண்டனர். பின்னர் இந்த மனவரைபடம் எதற்கு? தவறான அர்த்தமற்ற புரிதல்களை ஏற்படுத்தும் இத்தகைய படங்கள் மூலம் விளக்கங்கள் எதற்கு? நண்பரிடம் எழுந்த கேள்விகளைப் போன்றே நம்முள்ளும் இத்தகைய கேள்விகள் எழுகின்றன.


தொடக்க நிலை வகுப்புகளில் ‘செயல் வழிக் கற்றல்’ முறை அறிமுகம் செய்யப்பட்டதின் தொடர்ச்சியாக உயர் தொடக்க வகுப்புகளில் அதாவது 6,7,8 வகுப்புகளுக்கு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய கற்றல் முறைதான் ‘படைப்பாற்றல் கல்வி’ என அழைக்கப்படும் செயல்வழிக் கற்றல் முறை(ALM). இப்புதிய கற்றல் - கற்பித்தல் அணுகுமுறையில் பாடம் பயிற்றுவிக்கப்பட்ட நிகழ்வுதான் மேலே கூறியது.

தொடக்க நிலை வகுப்புகளுக்கு செயல்வழிக் கற்றல்(ABL) முறையில் பயிற்றுவித்தல் நடைபெறும் நிலையில் உயர் தொடக்க வகுப்புகளில் பாடங்கள் பயிற்றுவிக்கப்பட ஒரு புதிய அணுகுமுறை தேவைப்பட்டது. அத்தேவையினை நிறைவேற்றும் வகையில் உருவாக்கப்பட்டதே ‘படைப்பாற்றல் கல்வி’ எனப்படும் இந்த ‘செயல்வழிக் கற்றல் முறை’(ALM).

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஒரு குழு ரிசி பள்ளத்தாக்கு பள்ளி(The School)க்கு சென்றுவந்தது. உயர்தொடக்க வகுப்புகளுக்கு பயிற்றுவிக்க ஏதுவான முறையில் அமைந்திருந்த அப்பள்ளியின் கற்றல் முறையை தமிழக பள்ளிகளில் பயன்படுத்தலாம் என்று முடிவு செய்தது. ரிசி பள்ளத்தாக்கு பள்ளி ஆசிரியர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். 11 நாள்கள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. மே 2007-ல் நடைபெற்ற பட்டறையில் 60 ஆசிரியப் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி பட்டறை நிறைவடையும் நிலையில், ரிசி பள்ளத்தாக்கு பள்ளியில் செயல்படுத்தப்படும் கற்றல் முறைக்கு இணையானதொரு ‘செயல்வழிக் கற்றல் முறை(Active Learning Methodology)’ உருவாக்கப்பட்டது. ‘கற்பித்தல்’ என்ற வகுப்பறை செயல் கற்றல் என்ற நிலைக்கும் வகுப்பறை, கற்பிப்பவராகிய ஆசிரியரிடமிருந்து கற்போராகிய மாணவர்களிடம் கொண்டு செல்லப்படுவதாகவும் இம்முறை அமைந்திருக்கிறதாம்.

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் 120 பள்ளிகளில் இப்புதிய கற்றல் முறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. 60 ஆசிரியப் பயிற்றுநர்களும் முழு அளவில் செயல்பட்டு திட்டத்தின் வெற்றிக்காக உழைத்தனர். சூலை - 2007ல் நடைபெற்ற பட்டறை மூலம் ரிசி பள்ளத்தாக்கு பள்ளி ஆசிரியர்களும், ஆசிரியப் பயிற்றுநர்களும் இணைந்து இப்புதிய கற்றல் முறைக்கு ஏதுவான கட்டகங்களையும் பாடத்திட்டங்களையும் கால அட்டவணைகளையும் உருவாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 2000-க்கு அதிகமான மனித நாள்கள் இப்பணிக்காக செலவிடப்பட்டதாம். அக்டோபர் 2007-ல் தமிழக அரசு அரசாணை எண்: 260 நாள்: 12-10-2007 மூலம் படைப்பாற்றல் கல்வி எனப்படும் செயல்வழிக் கற்றல் முறையை நடைமுறைப்படுத்தியது.

தமிழக கல்வி வரலாற்றிலேயே ஏன் இந்திய இல்லை உலகக் கல்வி வரலாற்றிலேயே உருப்பெற்ற 6 மாதங்களுக்குள்ளாக நடைமுறைக்கு வந்த கற்றல்-கற்பித்தல் முறை படைப்பாற்றல் கல்வி எனப்படும் செயல்வழிக் கற்றல் முறையாக மட்டுமே இருக்க முடியும். அரசுக்கு கூடுதல் செலவினங்கள் எதையும் ஏற்படுத்தாத ஒரு முறையாக இப்புதிய கற்றல் முறை அமைந்துவிட்டதாம். அரசாணையில் இந்த வரிகள் இடம் பெற்றிருக்கிறது. கூடுதல் செலவினங்கள் ஏற்படாத நிலையில் எதைச் செயல்படுத்தினாலும் அரசுகள் கண்டுகொள்ளாது போலும்.

அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கனவுத் திட்டங்களில் ஒன்றான படைப்பாற்றல் கல்வியின் நோக்கங்களாக பின்வருவனவற்றைக் கூறுகின்றனர்.

· மாணவர்களை கற்றலில் நேரடியாக தானே ஈடுபடச் செய்தல்.


· மாணவர்களின் தனித்தன்மை, முழு ஈடுபாடு, மனப்பான்மைகள், திறமைகள், ஆர்வங்கள், உரிமைகள் அனைத்திற்கும் மதிப்பளித்தல்.

· உருவாக்கும் ஆற்றலை உரிமைப்படுத்துதல்.

· பாடத்திட்டத்தை முறையாகப் பயன்படுத்துதல்.

· வரையறுக்கப்பட்ட நேரத்திற்குள் கற்றல் செயல்களை முடித்தல், மனவரைபடம் மற்றும் தொகுத்தலை பயன்படுத்துதல்.

· ஒரு சனநாயக வகுப்பறையை உருவாக்குதல்.

· படைப்பாற்றல் கல்வி முறையின் மதிப்பை உணர்தல்.

· முறையான மதிப்பீடு, திருப்புதல் மற்றும் குறைதீர் கற்பித்தலை பயன்படுத்துதல்.

· சிறப்பான செயல்பாடுகளைச் செய்தல்.

· பாடத் தொடர்புள்ள கேள்விகள், சரியான கேள்விகள் கேட்கப்பட்டதா என உறுதி செய்தல்.

· நற்பயன் விளைவிக்க உரியச் செயல்களைச் செய்தல்.


படைப்பாற்றல் கல்வியின் கூறுகள்:

படைப்பாற்றல் கல்வி எனப்படும் செயல்வழிக் கற்றல் முறை புரிந்து கொள்ளுதல், தொகுத்துரைத்தல், வலுவூட்டுதல் ஆகிய மூன்று கூறுகளைக் கொண்டிருக்கிறது.

1. புரிந்து கொள்ளுதல்:

வாசித்தல் (Reading), மனவரைபடம்(Mindmap) என இரு படிநிலைகள் இதில் உள்ளடங்கியுள்ளது.

வாசித்தல் என்பது

1. தானே கற்றல்(Self Study)

2. இணைக் கற்றல்(Pair Study)

3. SQ4R முறை

4. படங்கள்(Diagram) வழிகற்றல்

என்ற வகைகளில் நடைபெறும்.


2. தொகுத்துரைத்தல்:

வாசித்துப் புரிந்து கொண்ட செய்தியை மனவரைபடமாக வரைந்துகொள்ளும் மாணவன், மனவரைபடத்தின் உதவியுடன் தான் படித்தவற்றை தொகுத்து எழுதுதல் வேண்டும்.

தொகுத்தல் என்பது பின்வரும் முறைகளில் அமையலாம்.

1. வார்த்தை வலை(Word web

2. அட்டவணை(Tables).

3. குறிப்புகள்(Hints).

4. வரிசைமுறையில் எழுதுதல்.

5. படங்கள் வரைதல்.

6. உண்மைத் தகவல்கள்.

7. காலங்கள்.


3. வலுவூட்டுதல்:

எழுதுதல், விவாதித்தல் என்ற நிலைகளில் வலுவூட்டுதல் நடைபெறும். எழுதுதல் என்பது பாட வினாக்களுக்கு விடை எழுதுதல் என்ற வகையிலும், விவாதித்தல் என்பது ஐயங்களை விவாதித்து தெளிவு பெறுதல் என்பதாகவும் அமைந்திருக்கும்.

படைப்பாற்றல் கல்வியின் ஆதாரக் கோட்பாடுகள்:

படைப்பாற்றல் கல்வி 5 ஆதாரக் கோட்பாடுகளை மையமாகக் கொண்டு செயல்படுகிறது.

1. வாசித்தல்

2. கோட்பாடுகளைக் கண்டறிதல்

3. மனவரைபடம் வரைதல்

4. தொகுத்தல்

5. திருப்பிப் பார்த்தல்

என்ற வகையில் இது அமைந்துள்ளது.

படைப்பாற்றல் கல்வியை செயல்படுத்துதல்:

படைப்பாற்றல் கல்வி முறையில் நான்கு வகையான கற்றல் முறைகள் அமைந்துள்ளன. அவை

1. தானே கற்றல்

2. இணைக் கற்றல்

3. SQ4R முறை

4. படங்கள் வழி கற்றல்

தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு கற்றல் முறைகளும் 90 மணித்துளிகள் கால அளவில் நடைபெறும். ஒவ்வொரு கற்ற முறையும்

1. அறிமுகம்

2. வாசித்தல்

3. மனவரைபடம்

4. தொகுத்தல்

5. விவாதம்

6. வலுவூட்டுதல்

7. ஒப்படைப்புகள்

8. குறைதீர் கற்பித்தல்

9. எழுதுதல்

என்ற படிகளை உள்ளடக்கியதாக அமைந்திருக்கும்.

மனவரைபடம்:

படைப்பாற்றல் கல்வியில் பெரிதும் வலியுறுத்தப்படுவது மனவரைபடம் என்பதாகும். படைப்பாற்றல் கல்வி முறை மனவரைபடம் என்பதையே மையமாகக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை. மாணவர்களின் மனத்தின் பதிவுகள் இவ்வரைபடத்தில் வெளிப்படுகிறதாம். பாடப்புத்தகத்தை வாசித்துப் புரிந்து கொண்ட மாணவன் தனது புரிதலை மனதில் நிறுத்த அதனை மனவரைபடமாக வரைய வேண்டும். மனவரைபடத்தை நினைவு கூறும் நிலையில் மாணவன் தேர்வுகளில் சிறப்பாக பதிலளிக்க முடியுமாம். மனவரைபடமின்றி கற்றல் என்பது இல்லை என்ற நிலை விரைவில் தமிழகத்தில் உருவாகும்.

மனவரைபடம் என்றால் என்ன?

· புதிய எண்ணங்களை, சிந்தனைகளை ஒருங்கமைக்கும் படைப்பாற்றலே மனவரைபடம்.

· தன் கற்பனைத் திறனுக்கேற்ப மையக் கருத்தையும் துணைக் கருத்துகளையும் வரைபடமாக விளக்கும் தெளிவான மிகச் சிறந்த கற்றல் நுணுக்கம்.

· முக்கிய கூற்றுகளையும் அன்றாட வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் படித்தல், அதனுடன் தொடர்புடைய கருத்துகளையும் சிந்தனைகளையும் நினைவாற்றலுக்கேற்ப வரைபடமாக விளக்கும் கற்றல் விளைவு.

· மனவரைபடம் புரிதலின் விளக்க அமைப்பு.

· மனவரைபடம் ஒரு விதமான வகைப்படுத்துதல் அல்லது வரிசைப்படுத்தல்.

· அறிவுத் திறனுக்கேற்ற சொற்களை இணைக்கும் ஒரு வலைப்பின்னலே மனவரைபடம்.

· மனவரைபடம் சொற்பொருள்களின் அமைப்பு அல்லது அறிவு சேகரிப்பு.

· தன் நினைவில் நின்ற கூற்றுகளை கருத்துகளை வெளிப்படுத்தும் பார்வையான மரம் போன்ற அமைப்பு.

· நினைவாற்றலை பிரதிபலிக்கும் மரம் போன்ற அமைப்பு.

· செறிவான கூரிய கருத்துகளை ஒன்றுக்குள் ஒன்று இணைக்கும் பாலம்.

· மனித மூளையின் ஒருங்கிணைந்த முழு செயல்பாட்டின் விளைவே மனவரைபடம்.

மனவரைபடம் எவ்விதத்தில் நன்மை பயக்கும்?

· மனித மூளையின் ஒருங்கிணைந்த முழு செயல்பாடாக சோர்வின்றி, சுறுசுறுப்புடன் மாணவன் கற்றலில் ஈடுபடச் செய்யும்.

· அதிகப்படியான கருத்துகளை குறைந்த நேரத்தில் ஒருங்கமைக்க உதவும்.

· குறைந்த முயற்சியில் ஒருங்கமைக்கவும் கற்கவும் உதவும்.

· சிந்தனைகளைத் தெளிவுபடுத்தும்.

· படைப்பாற்றலைத் தூண்டும்.

· நினைவாற்றலை ஒருங்கமைக்கும் அடித்தளமாக அமையும்.

· கற்பனைத் திறனை அதிகரிக்கும்.

· மனதில் தோன்றும் கேள்விகளையும், கருத்துகளையும் பாடத்துடன் தொடர்புபடுத்த ஏதுவாகும்.

· மனவரைபடம் வரைதலின் போது முழு ஈடுபாடு வருகிறது.

· மனவரைபடம் வரைதலின் போது மனமகிழ்ச்சி ஏற்படுகிறது.

· மனவரைபடம் படிக்கவும், மனதில் நிறுத்திக் கொள்வதற்கும் ஏதுவாகிறது.

· முதல் மனவரைபடம் ஆரம்பநிலையாக, வளரா நிலையாக இருப்பினும் பிறகு வரையப்போகும் மனவரை படத்திற்கு அடித்தளமாக அமைகிறது.


டைப்பாற்றல் கல்வி முறை என்பது ஒரு திட்டமிட்ட கற்றல் முறையாக முன்வைக்கப்படுகிறது. மாணவர்களும் ஆசிரியரும் ஒருங்கிணைந்து செயல்படக் கூடியதாக இது உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கற்றுக் கொண்டதை நினைவில் நிறுத்திக் கொள்ள மன வரைபடம் வரைதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உயர் தொடக்கப் பள்ளி மாணவன் இத்தகைய விதிகளுக்கும் வரையறைகளுக்கும் கட்டுப்பட்டுக் கல்வி கற்றல் என்பது இயலுமா?

ஒருவன் தனது சூழ்நிலைகளை(சுற்றியுள்ள உலகத்தை) உற்று கவனிக்கும்போது, புரிந்துகொள்ளும்போது, மனச் செயலாக உள்வாங்கிக் கொள்ளும்போது மனப்படங்கள் உருவாகின்றன. ஒவ்வொரு தனிநபரும் அவரது தனிப்பட்ட கண்ணோட்டத்துடன் கூடிய தனி மாதிரியை உருவாக்கிக் கொள்கிறார். அவரைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய அறிவை இப்படித்தான் ஒவ்வொருவரும் பெறுகின்றனர். இதற்கு மாணவர்களும் விதிவிலக்கல்ல.

புரூனர் என்பவரின் கூற்றுப்படி அறிவாற்றல் வளர்ச்சி மூன்று நிலைகளில் நடைபெறுகிறது. ஒரு குழந்தை ‘ஆப்பிள் பழம்’ என்பதை தொட்டுப் பார்த்து, கையில் எடுத்துப் பார்த்து, சுவைத்துப் பார்த்து அதனை அறிந்து கொள்கிறது. இது ‘செயல்பாட்டு நிலை’ பின்பு அக்குழந்தை வளரும்போது ஆப்பிள் பழத்தின் படத்தையோ, மாதிரியையோ ‘போலப் பார்த்தல்’ மூலம் உணர்வான். இது உருவ நிலை. இன்னும் வளர வளர ஆப்பிள் என்ற வார்த்தையொன்றே அவனுக்குப் பழத்தை நினைவுபடுத்தும். இது குறீயீட்டு நிலை.

படைப்பாற்றல் கல்வி எனப்படும் இப்புதிய கல்விமுறையில் இதுபோன்ற செயல்பாடுகளுக்கு இடமில்லை. உண்மையான படைப்பாற்றல் என்பது தொட்டு, சுவைத்து, உணர்ந்து கொள்வதன் மூலம் தானே நிகழமுடியும்?

படைப்பாற்றல் கல்வி முறை அடிப்படையிலேயே தவறாக உருவாக்கப்பட்டிருப்பது என்பது உறுதி. எப்பருவ வயது மாணவர்களுக்கு ஏற்றதான முறை என்பதில் இதை உருவாக்கியவர்கள் கவனம் செலுத்தவில்லை என்பது தெளிவு. படைப்பாற்றலின் கூறுகளாக கல்வியாளர்கள் பின்வருவனவற்றைப் பட்டியலிடுகின்றனர். அவை:

1. மொழிச் சரளம்

2. நெகிழும் தன்மை

3. தன்முதன்மை / தற்பண்பு

4. விரிவாக்கம்.


ஒவ்வொரு குழந்தையும் படைப்பாற்றல் நடத்தையை ஓரளவிற்குக் கொண்டிருக்கும். சில குழந்தைகள் சில குறிப்பிட்ட துறையில்(சான்றாக அறிவியல், கலை படைப்பு) சிறந்து விளங்கலாம். படைப்பாற்றல் சிந்தை உடைய மாணவர்களிடம் பின்வரும் இயல்புகள் காணப்படும்.

· தன் முதன்மைச் சிந்தனை வெளிப்பாடு, செயல் மற்றும் நடத்தை.

· பல நேரங்களில் நெருக்கடியான கேள்விகளைக் கேட்பது.

· தனது கருத்தை ஆணித்தரமாக விவாதிப்பது.

· தீர்வுகளுக்கு மாற்றுத் தீர்வுகளைச் சொல்வது.

· சுயகருத்து உயரிய நிலையில் அடைவைக் காட்டுதலில் மிகவும் ஆர்வமுடன் ஈடுபடுதல்.

· குழப்பங்களைத் தெளிவின்மையைப் பொறுத்துக் கொள்ளுதல்.

· ஆர்வமுடைமை, கட்டுப்பாடற்ற சுயதீர்ப்பு / தன்னாட்சியை வெளிப்படுத்துதல்.

இப்பண்புகளை வளர்த்தெடுக்கும் வழிமுறைகள் எதுவும் செயல்வழிக் கற்றல் முறையில் இருப்பதாகத் தெரியவில்லை.

சிந்தனை வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி குறித்து பியோகே, குழந்தை மனிதனாக வளர்ந்து முன்னேறும் பருவத்தோடு ஒப்பிட்டுத் தம் கருத்துகளை நமக்கு கோடிட்டுக் காட்டுகிறார். வாழ்வின் பச்சிளம் பருவத்தில்(0 - 2 ஆண்டுகள்) குழந்தை தொடுதல் மூலமும் புலனுணர்தல் மூலமுமே கற்கிறது. சின்னக் குழந்தைகள் கையில் தங்கள் கவனத்தை ஈர்க்கும் பொருள்களைப் பிடித்துக் கொண்டும் வாயில் போட்டுக் கொள்வதையும் பார்த்திருக்கிறோம். இந்த நிலையை பியோகே ‘புலனியக்க நிலை’ என்று கூறுகிறார். குழந்தை வளர வளர(2 - 7 ஆண்டுகள்) ஆராயும் திறன் வளர்கிறது. இந்த நிலையை ‘செயலுக்கு முந்தைய நிலை’ என்று கூறுகிறார். மூன்றாவது நிலையான ‘புலனிடான செயல் நிலை’யில்(7 - 11 ஆண்டுகள்) குழந்தை தேவையானதைக் கற்றுக் கொண்டதன் விளைவாகத் தான் பார்க்கும் பொருள்களில் மாற்றங்களைக் காண விழைகிறது. அவனது கற்பனைத் திறன் அவனது அடுத்த நிலையான ‘முறையான செயல் நிலை’க்கு(11 ஆண்டுகள் முதல்) இழுத்துச் செல்கிறது. இந்த நிலையில் அவன் தர்க்க முறையிலான கருதுகோளை அமைத்து இடையுறவை ஏற்படுத்தவும் முடிவுகளைப் பெறவும் முயற்சிக்கலாம்.

உயர் தொடக்க நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் பியோகேயின் கூற்றுப்படி ’புலனீடான செயல் நிலை’யைச் சார்ந்த குழந்தைகள். புதியனவற்றை அறிந்து கொள்ளத் துடிக்கும் பருவம் இது. தான் பார்க்கின்ற பொருள்களில், தான் கற்றுக் கொண்டிருப்பதை செயல் படுத்திப் பார்க்க விளைகின்ற பருவம் இது. இத்தகைய தன்மைகளைக் கருத்தில் கொண்டுதான் பள்ளி கலைத்திட்டம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. மாணவர்களின் மாற்றங்களைக் காண விரும்பும் ஆர்வத்தினைத் தூண்டுவதாக பாடங்கள் எழுதப்பட்டிருக்கும். பெரும்பாலும் புதிய செய்திகளை/கருத்துகளை அறிமுகம் செய்வதாகவே பாடங்கள் இருக்கும். மாணவர்களின் சிந்தனைத் திறன் வளர்ச்சியடைய உதவுவதாக பாடங்கள் அமைக்கப்பட்டிருக்கும். மாணவர்கள் இப்பாடங்களை முழுமையாக அறிந்து கொள்ளவேண்டுமாயின் ஆசிரியரின் விரிவான-எளிமையான விளக்கமும் வழிகாட்டுதலும் இன்றியமையாதது ஆகும். தற்போது நடைமுறையில் உள்ள படைப்பாற்றல் கல்வி முறையில் இதற்கான சாத்தியங்கள் இருப்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுத்தப் பட்டிருப்பினும் நடைமுறையில் பயன் விளைப்பதாக இல்லை.

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள படைப்பாற்றல் கல்வி முறை பற்றி ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் பின்வரும் ஐயங்களை எழுப்புகிறார்கள்.

· படைப்பாற்றல் கல்வி என்பது முறையான கற்றல் – கற்பித்தல் முறைக்கு சிறந்த மாற்றாக இருக்க முடியுமா?

· 90 மணித்துளிகள் பாடவேளை என்பது நடைமுறைச் சாத்தியம் தானா? மாணவர்கள் ஒருமுகப்பட்டு அத்துணை நேரம் வகுப்பறையில் செயல்படுதல் இயலுமா?

· மனைவரைபடம் என்ற ஒன்று மாணவர்களின் கற்பனை ஆற்றல் வளர்க்குமேயன்றி சிந்தனை ஆற்றலை வளர்க்குமா?

· தற்போதைய கல்வி முறையில் வளர்த்தெடுக்கப்படும் ஒரே ஒரு திறனான மனப்பாட ஆற்றலையும் மனவரைபடம் அழித்துவிடாதா?

· அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு மட்டும் படைப்பாற்றல் கல்விமுறையை முன்னோட்டமாக செயல்படுத்திட அரசால் வழங்கப்பட்ட ஆணையைப் புறந்தள்ளி அனைத்து பாடங்களும் படைப்பாற்றல் கல்வி முறையில் நடத்தப்போவது எப்படி? அரசையும் தாண்டிய அதிகாரம் அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கு இருக்கிறதா?

· அறிவியல் பாடம் கற்பித்தலில் படங்கள், மாதிரிகள் மூலம் கற்பித்தல் நடைபெறும் நிலையில் மனைவரைபடம் எதற்கு? படங்களே சிறந்த மனவரைபடங்கள் தானே?

· சமூக அறிவியல் பாடத்தில் பயன்படுத்தப்படும் காலக்கோடுகள், நிலப்படங்கள், போன்றவை மனைவரைபடங்கள் தானே? இவற்றிற்கு இன்னொரு மனவரைபடம் தேவையா?

· மாணவர் தான் படித்தவற்றை மனவரைபடமாக வரைந்து, பின்னர் அதனைத் தொகுத்து, மீண்டும் வினாக்களுக்கு விடையாக குறிப்பேட்டில் எழுதுதல் என்பது அளவுக்கு அதிகமான சுமையாக இராதா?

· பாட அறிமுகம், விளக்கம் இவற்றிற்கு குறைவான கால அளவே(10-20 மணித்துளிகள்) ஆசிரியருக்கு வழங்கப்படுவதால் பாடம் தொடர்புடைய பிற கருத்துகளை மாணவர்கள் அறிந்து கொள்ள இயலாத நிலை இருப்பது இம்முறைக்கு பின்னடைவுதானே?

இறுதியாக, அரை வேக்கட்டுத்தனமான இத்தகைய புதிய முயற்சிகளினால் எவ்வித பயனும் விளைந்து விடப் போவதில்லை. இப்புதிய கற்றல் கற்பித்தல் முறையினால் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து விடும். இம்முயற்சிகள் அனைத்தும் ஆங்கில வழிப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பதாகவே அமையும் என்பதில் ஐயமில்லை. கல்வி என்பது கடைச் சரக்கு தானோ
?

(இக்கட்டுரை மேய் 2009 தமிழினி இதழில் வெளிவந்துள்ளது.)

கற்றதனால் ஆய பயனென்?

மார்ச்சு மாதம் துவங்கியதும் தேர்வு பரபரப்பும் துவங்கிவிடும். ஒருமுறை எனது ஆய்வுகள் தொடர்பாக நூல்கள் சிலவற்றை பெறுவதற்காக கல்லூரி நூலகர் ஒருவரை சந்திக்கச் சென்றிருந்தேன். தன் மகளை மேனிலைப் பொதுத் தேர்வுக்கு ஆயத்தம் செய்து கொண்டிருப்பதாகவும் தற்போது உதவ இயலாத நிலையில் இருப்பதாகவும் மார்ச்சு மாதத்திற்கு பிறகே இது தொடர்பாக உதவ இயலும் என்று கூறி மறுத்துவிட்டார். (நூலகரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றாற்போல் அவரது மகள் மதிப்பெண் பெறவில்லை என்று இன்னொரு முறை நூலகரை சந்தித்தபோது அறிந்து கொண்டேன்.) தொழிற்கல்வி பட்டப் படிப்புக்களுக்கான நுழைவுத் தேர்வுகள் எடுபட்டுவிட்ட நிலையில் மேனிலைப் பொதுத் தேர்வுகளின் மீது அரசு அதிக அக்கரை கொண்டுள்ளதுபோல் காட்டிக் கொள்கிறது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள், அறிவுரைகள் நாளும் வழங்கப்படுகின்றன. தாளிகைகள், மாத இதழ்கள், தொண்டு நிறுவனங்களால் தங்கள் பங்கிற்கு அறிவுரைகளும் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்கல்விகள் பயில அடிப்படையாக உள்ள பாடங்கள் தொடர்பான தேர்வுகளில் மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இந்த பாடங்களுக்கான தேர்வுகளின் போது விதிமீறல்கள், ஒழுங்கீனங்கள் நடைபெறாமல் இருக்க அதிக கவனம் எடுத்துக் கொள்ளப்படும். தேர்வறை முதன்மைக் கண்காணிப்பாளராகச் செயல்படும் அப்பள்ளி தலைமையாசிரியர் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவார். அவரோடு அந்தப்பள்ளியின் அலுவலகப் பணியாளர்களும் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர். ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு தேர்வுக் கண்காணிப்பாளராகச் செல்லும் வழக்கமான நடைமுறை தொடரும்.

தேர்வுகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் மாவட்டங்கள் தோறும் அரசால் அனுப்பப்படும் பார்வையாளர்கள்; வழக்கம்போல் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், கல்வி அதிகாரிகள் தலைமையிலான தேர்வு கண்காணிப்பு படைகள்; காலணிகள், இடுப்புபட்டைகள் அணிதல் கூடாது என்ற கட்டுப்பாடுகள்; மாணவர்கள் தேர்வு நேரத்திற்கு அரை மணிநேரம் முன்பே தேர்வறையில் தயாராக இருக்க வேண்டும் என்பது போன்ற விதிமுறைகள்; தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது மேற்கொள்ளப்படுவதாக சொல்லபடும் தண்டனைகள் தொடர்பான அளவுகடந்த அச்சுறுத்தல்கள்; அனைத்திற்கும் மேலாக பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் - நெருக்குதல்கள்; இத்தனை தாக்கங்களையும் தாண்டி தேர்வறையில் தேர்வெழுதும் விடலைப் பருவ மாணவர்கள்!

மார்ச்சு பொதுத் தேர்வுக்கு 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களை ஆயத்தம் செய்யும் நடவடிக்கைகள் கல்வியாண்டின் தொடக்கத்திலிருந்தே துவங்கிவிடும். சனவரி மாதம் முதல் உச்ச கட்ட தயாரிப்புகள் ஆரம்பமாகும். மாணவர்களை தேர்வுக்கு ஆயத்தம் செய்ய பல்வேறு பயிற்சிகள், திரும்ப (Revision)த் தேர்வுகள், ஒப்புரு(மாதிரி)த் தேர்வுகள் என்று எத்தனையோ. மாணவர்களின் மனப்பாட ஆற்றலை மட்டுமே வளர்க்கும் இத்தகு பயிற்சிகள் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற்றுத்தரும் என்பதை மறுப்பதற்கில்லை. இவ்வாறு ஒவ்வொரு புத்தாண்டின் துவக்கமும் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு ஆண்டாகவே பிறக்கும்.

தேர்வெழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் உருவாக்கம் - சரிபார்த்தல், தேர்வறை கண்காணிப்பாளர்களாக செயல்படும் ஆசிரியர்களின் பெயர் பட்டியல் - ஊதிய விவரப் பட்டியல் உருவாக்கம், மாணவர்களுக்கான தேர்வறை நுழைவு அட்டை உருவாக்கம், செய்முறை தேர்வுகளுக்கான கால அட்டவணை உருவாக்கம், விடைத்தாள் கட்டுகளைப் பெறுதல் போன்ற தேர்வுக்கான ஆயத்தப் பணிகள் சனவரி மாதம் முதல் வேகம் பெறும். பெரும்பாலான பள்ளிகளில் பள்ளி ஆண்டு விழா போன்ற நிகழ்வுகள் இந்தக் காலங்களிலே நடைபெறுகிறது. பள்ளி ஆண்டு விழா போன்ற நடவடிக்கைகளோடு தேர்வுக்கான ஆயத்தங்களும் பள்ளிகளில் முழு வீச்சில் நடைபெறும்.

இந்தச் சூழலில் பொதுத் தேர்வு எழுதும் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் தவிர்த்த பிற வகுப்பு மாணவர்களின் கல்விச் சூழல் எத்தகையதாக இருக்கும்?

பொதுத் தேர்வுக்கு மாணவர்களை ஆயத்தம் செய்யும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான பள்ளி வேலைநாட்கள் 200 என வரையறுக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின் படி 212 நாள்கள் வேலை நாட்களாக உள்ளது. கல்வியாண்டு மூன்று பருவங்களாக பகுக்கப்பட்டு பள்ளியின் கல்விச் செயல்பாடுகள் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. முதல் பருவத்தின் இறுதியில் காலாண்டுத் தேர்வும் இரண்டாம் பருவத்தின் இறுதியில் அரையாண்டுத் தேர்வும் மூன்றாம் பருவத்தின் இறுதியில் ஆண்டிறுதித் தேர்வும் நடைபெறும். இம்மூன்று தேர்வுகளில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு மாணவர்கள் வகுப்புயர்வு பெறுவர்.

பொதுவாக முதலிரண்டு பருவங்களில் கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகளின் குறுக்கீடுகள் குறைவு. (அனைவருக்கும் கல்வி இயக்கம் உருவாக்கப்பட்ட பின்பு நிலைமை தலைகீழ்.) விதிவிலக்கான சூழல்களில் மட்டும் இவ்விரு பருவ கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகளில் தடை ஏற்படலாம். கற்றல் - கற்பித்தல் சூழலில் மாணவர்கள் அதிகம் பாதிப்படைவது மூன்றாம் பருவத்தில்தான். இப்போது தான் மேலே குறிப்பிட்டுள்ள பொதுத் தேர்வு ஆயத்தப் பணிகளைச் செய்தாக வேண்டும். அத்துடன் பள்ளி வகுப்பறைகள், தேர்வு அறைகளாக மாற்றப்படும். பொதுத் தேர்வு எழுதும் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களின் வகுப்பறைகள் போதாமையால் ஏனைய வகுப்பு மாணவர்களின் வகுப்பறைகளும் தேர்வு அறைகளாக மாற்றப்படும். இதன் காரணமாக பிற வகுப்புகளின் அன்றாடக் கற்றல் - கற்பித்தல் செயல்கள் பாதிக்கப்படும். தேர்வறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் வகுப்புகளுக்கு செல்ல இயலாது. தேர்வுப் பணிக்கு கூடுதல் ஆசிரியர்கள் தேவைப்படுவதால், பிற வகுப்புகளுக்கு கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகள் தடைபடும். இத்தகு நிகழ்முறையில் குறிப்பாக 9, 11 ஆம் வகுப்புகள் அதிக அளவில் பாதிக்கப்படும்.

மேனிலைப் பொதுத் தேர்வுக்கு முன்னதாக செய்முறைத் தேர்வுகள் நடத்தப் படவேண்டும். பிப்ரவரி மாதத்தில் செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படும். மேல்நிலை வகுப்பு ஆசிரியர்கள் புறத் தேர்வாளர்களாக வேறு பள்ளிகளுக்கு அனுப்பப்படுவர். செய்முறைத் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்யும் வேலையும் பள்ளிகளில் முழு அளவில் நடைபெறும். இந்நாட்களில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களில் அன்றாடக் கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளில் பெருமளவு தொய்வு ஏற்படும்.

பொதுத் தேர்வுகள் மார்ச்சு மாதத்தில் துவங்கும். முதலில் மேனிலை(12)ப் பொதுத் தேர்வும் அதனைத் தொடர்ந்து பள்ளி இறுதி வகுப்பு(10)ப் பொதுத் தேர்வும் நடைபெறும். தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பள்ளிகளின் அன்றாட செயல்பாடுகள் முழுவதுமாக தடைபடும் காலம் இது. பொதுத் தேர்வு நடைபெறும் நாட்களில் ஏனைய வகுப்புகள் பிற்பகலில் மட்டுமே நடைபெறும். பள்ளியில் பெரும்பான்மை வகுப்பறைகள் தேர்வறைகளாக மாற்றப்பட்டிருப்பதால் பிற்பகல் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இருக்கைகளை மாற்றம் செய்தல் கூடாது, இருக்கைகளில் எழுதப்பட்டிருக்கும் தேர்வு(பதிவு) எண்களில் மாற்றம் செய்தல் - அழித்தல் கூடாது, கரும்பலகைகளில் எழுதப்பட்டுள்ள தேர்வு தொடர்பான விபரங்களை அழித்தல் கூடாது என்பன போன்றவை அவற்றுள் சில. இதனால் கற்றல் - கற்பித்தல் நிகழ்முறைகள் பெயரளவில் மட்டுமே நடைபெறும்.

பொதுவாக கல்வி போதனைக்கு ஏற்ற நேரமாக காலை நேரமே கருதப்படுகிறது. முற்பகலில் வீடுகளில் இருக்கும் மாணவர்கள், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் பிற்பகலில் பள்ளிக்கு வருகின்றனர். வெயிலின் வெம்மை ஒருபுறம்; முற்பகலில் வீட்டில் இருக்கும்போது பொழுதைக் கழிப்பதற்கு மேற்கொண்ட விளையாட்டுகளின் களைப்பு மறுபுறம்; இதனால் வகுப்பறையில் சோர்வாக காணப்படும் மாணவர்கள்!

தேர்வுக் கண்காணிப்பாளராக வேறு பள்ளிகளுக்குச் செல்லும் ஆசிரியர்கள் மதியம் பள்ளிக்கு வருகை தர இயலாது. மேனிலைப் பிரிவு ஆசிரியர்கள் தேர்வுப் பணியில் ஈடுபடுவதால் பிற்பகல் வகுப்பிற்கு பள்ளிக்கு வருகை தராத நிலையில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களின் நிலை இரங்கத்தக்கது. இதுபோன்ற நடைமுறையே பள்ளி இறுதி வகுப்பு(10)ப் பொதுத் தேர்விலும் பின்பற்றப்படுவதால் அந்நாட்களில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் நிலை பரிதாபகரமானது.

மேனிலைப் பொதுத் தேர்வு நடைபெறும் மார்ச்சு மாதத்தின் பிற்பகுதியில் பதினொன்றாம் வகுப்பு மாவட்டப் பொதுத் தேர்வுகள் துவங்கும். பெரும்பாலும் காலையில் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வும், பிற்பகலில் பதினொன்றாம் வகுப்புத் தேர்வும் நடைபெறலாம். பொதுத் தேர்வுப் பணிக்கு சென்றுவிட்ட மேனிலைப் பிரிவு ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தர இயலாத நிலையில் பதினொன்றாம் வகுப்பு மாவட்ட பொதுத் தேர்வை நடத்தும் பொறுப்பு பள்ளியில் உள்ள ஏனைய ஆசிரியர்களின் மீது சுமத்தப்படும். இதனால் 6,7,8,9-ஆம் வகுப்பு மாணவர்களின் அரைநாள் பாடவேளையும் பாதிக்கப்படும்.

பதினொன்றாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மாவட்ட அளவில் நடத்தப்படுவதற்கு என்ன காரணம்? தற்போது நடத்தப்படும் மாவட்டப் பொதுத் தேர்வு, மேனிலைப் பிரிவுகள் பள்ளிகளில் உருவாக்கப்பட்ட தொடக்க காலங்களில் நடத்தப்படவில்லை. மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற் படிப்புகளின் முக்கியத்துவம் உணரப்பட்ட நிலையில், மேனிலைப் பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்வதில் பள்ளிகள் மிகுந்த கவனம் செலுத்தத் தொடங்கின. இதன் காரணமாக பதினொன்றாம் வகுப்பு கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகளில் தொய்வு காணப்பட்டது. பெரும்பான்மையான பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வியாண்டின் மூன்றாம் பருவத்திலேயே பனிரெண்டாம் வகுப்பு பாடங்கள் கற்பிக்கப்பட்டன. தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பாடங்களுக்கு முக்கியத்துவம் தராமல் பெயரளவில் மட்டும் கற்பித்துவிட்டு பனிரெண்டாம் வகுப்பு பாடங்களை இரண்டு ஆண்டுகளும் கற்பிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு உருவாக்கப்பட்டதே பதினொன்றாம் வகுப்பிற்கான மாவட்டப் பொதுத் தேர்வுகள்.

மாவட்ட அளவில் நடத்தப்படும் பதினொன்றாம் வகுப்புத் தேர்வுக் கட்டணமாக உரூ.50/-வசூலிக்கப்படும். தேர்வின் விடைத் தாள்கள் அந்தந்த பள்ளிகளில் திருத்தப்படாமல் மாவட்டத்திலுள்ள வேறு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு திருத்தப்படும். (தற்போது இம்முறை குமரி மாவட்டத்தில் நடைமுறையில் இல்லை. பிறமாவட்டங்களில் என்ன நிலை என்பது தெரியவில்லை.) தேர்வு முடிவுகள் மாவட்ட அளவில் நாளிதழ்களில் வெளியிடப்பட்டாலும், பொதுத் தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்படாமல் ஒரு மாணவரின் தேர்ச்சியை முடிவு செய்யும் அதிகாரம் அம்மாணவன் பயின்ற பள்ளித் தலைமையாசிரியரிடமே உள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புயர்வு வழங்கும் வகையில் தேர்ச்சிப் பட்டியல் உருவாக்கப்படும்.

ஒரு பள்ளியில் அனைத்து மாணவர்களும் வகுப்புயர்வு பெறுதல் இயலுமா? கீழ் வகுப்புகளில் குறிப்பாக 6,7,8,9 வகுப்புகளில் குறைந்த அளவு தேர்ச்சி மதிப்பெண் 25 என வரையறுக்கப்பட்டு மாணவர்களின் வகுப்புயர்வு பட்டியல் உருவாக்கப்படும். பெரும்பாலும் தேர்வெழுதும் மாணவர்கள் 25 மதிப்பெண்கள் பெறும் வகையில் பார்த்துக் கொள்ளப்படும். ஆனால் பதினொன்றாம் வகுப்புத் தேர்வில் இம்முறை பின்பற்றப்படுவதில்லை. கூடுதல் மதிப்பெண்கள் வழங்கும் முறை பின்பற்றப்படுகிறது. ஒரு பாடத்தில் மிகக் குறைவாக மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவனின் மதிப்பெண்கள் அடிப்படையில் கூடுதல் மதிப்பெண்கள் முடிவு செய்யப்படும்.

இறுதியாக ஏப்ரல் மாதத்தில் 6,7,8,9-ஆம் வகுப்புகளுக்கான ஆண்டிறுதித் தேர்வுகள் தொடங்கும். முன்பெல்லாம் எட்டாம் வகுப்புத் தேர்வுகள் அரசு பொதுத் தேர்வு போன்று நடத்தப்பட்டது. மாவட்ட அளவில் ஆங்கிலம் தவிர்த்த பிற பாடங்களுக்கும், மாநில அளவில் ஆங்கில பாடத்திற்கும் வினாத்தாள்கள் உருவாக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் தற்போது இம்முறை நடைமுறையில் இல்லை. ஆயினும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தேர்வுக் கட்டணமாக உரூ. 2 /- வசூலிக்கும் நடைமுறை தொடர்கிறது. நடைபெறாத பொதுத் தேர்வுக்கு தேர்வுக் கட்டணம் எதற்கு?

கல்வியாண்டின் இறுதிப் பருவத்தில் முழுவதுமாக அலைக்கழிக்கப்பட்ட மாணவர்கள் ஆண்டிறுதித் தேர்வினை எதிர்கொள்கிறார்கள். முறையான கண்காணிப்பின்மை, வழிகாட்டுதலின்மை, பகுதி நேர வகுப்புகள் போன்ற காரணங்களினால் மாணவர்களின் கல்விச் சூழல் சிதைந்த நிலையில் தேர்வுகள் நடைபெறுகின்றன. சூழல்களில் தாக்கம் விடைத்தாள்களில் வெளிப்படும். இச்சூழ்நிலையில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறையாமல் பார்த்துக் கொள்ளப்படும். இவ்வாறு வெற்றிகரமாக ஒரு கல்வியாண்டு நிறைவு செய்யப்படும்.


(இக்கட்டுரை மார்ச்சு 2009 ஒளிவெள்ளம் இதழில் வெளிவந்துள்ளது.)

செயல் வழிக் கற்றல்

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் இரண்டு நாள் பயிற்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்தேன். உணவு இடைவேளையின் போது பயிற்சியில் கலந்துகொண்டுள்ள ஆசிரியர்கள் அளவளாவிக் கொண்டிருந்தோம். பொதுவாக ஆசிரியர்கள் இருவர் பேசிக்கொள்வதாக இருந்தால் பெரும்பாலும் அவர்களின் பேச்சு ஊதியம் தொடர்பானதாகவே அமையும். இன்னமும் அறிவிக்கப்படாமல் இருக்கும் அகவிலைப் படி உயர்வு, நடுவரசு பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஊதியக் குழு, இந்த ஆண்டு அரசால் வழங்கப்படவிருக்கும் பொங்கல் பரிசு பற்றிய எதிர்பார்ப்பு என்ற நிலையிலேயே உரையாடல்கள் அமைந்திருக்கும். அன்று விதிவிலக்காக உரையாடல் பள்ளி மாணவர் சேர்க்கை, ஆசிரியர் பணியிடங்கள் நிறுவுதல் போன்றவற்றை சுற்றியதாக அமைந்துவிட்டது.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சூன், சூலை மாதங்களில் முடிக்கப்பட்டு விடும். சூலை 31-ஆம் நாள் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடம் ஒவ்வொரு பள்ளிக்கும் நிறுவப்படும். 40 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற வீதத்தில் பணியிடம் நிறுவப்படும். தொடக்க நிலை வகுப்புகளில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்களின் எண்ணிக்கை அரசால் முடிவு செய்யப்படுகிறது. உயர்தொடக்க, உயர், மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் என்ற நிலையில் ஆசிரியர் எண்ணிக்கை முடிவு செய்யப்படுகிறது. இவ்வாறு எண்ணிக்கை முடிவு செய்வதில் தவறுகள், விதிமீறல்கள் நிகழா வண்ணம் இருப்பதற்காக பல்வேறு அறிவுரைகள் - பல வேளைகளில் அச்சுறுத்தல்களை கல்வி அதிகாரிகள் நிகழ்த்துவர். அரசுப் பள்ளிகளில் இதன் தாக்கம் வெளிப்படையாக தெரியாவிட்டாலும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் இதன் விளைவுகள் தெளிவாகத் தெரியும். அரசு உதவி பெறும் பள்ளிகள் தங்கள் ஆசிரியர் பணியிடங்களை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு உத்திகளை மேற்கொள்ளும்.

இந்தக் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை அரசு, மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மிகவும் குறைந்து விட்டதாக ஆசிரியர் ஒருவர் வருந்தினார். தமிழகம் முழுவதும் தமிழ் வழி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. தொடக்கப் பள்ளிகளில் இதன் தாக்கம் அதிகமாகத் தெரிகிறது. இந்த சேர்க்கைக் குறைவிற்கு தொடக்கப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தபட்டுள்ள புதிய கற்றல் கற்பித்தல் முறையே காரணம் என்று ஒட்டுமொத்த ஆசிரியர்களும் கூறுகின்றனர். சென்ற கல்வியாண்டி(2007-08) அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ′செயல் வழிக் கற்றல்′ என்ற புதிய கல்விப் பயிற்றுமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கல்வியாண்டில் தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அளவுக்கதிகமாக அதிகரித்துள்ளதாக மற்றொரு ஆசிரியர் குமுறினார். அவரது கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பயிலும் பெரும்பான்மை மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ்(T.C.) பெற்று அருகில் உள்ள ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்துள்ளனராம். கடந்த ஆண்டுகளில் வகுப்புக்கு ஒன்று அல்லது இரண்டு பிரிவுகளுடன் இருந்த அந்த ஆங்கிலப் பள்ளியில் நிகழ் கல்வியாண்டில் ஒவ்வொரு வகுப்பிற்கும் கூடுதலாக ஒரு பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாம். அண்மை தமிழ் வழி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பெரும்பாலோர் அந்த ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்துள்ளதே இந்த உயர்வுக்குக் காரணமாம். இதனால் அந்த ஆங்கிலப் பள்ளியில் கல்விக் கட்டணமும் உயர்ந்துவிட்டதாம்.

தனியார் ஆங்கிலப் பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கைக்கென ஆண்டுதோறும் பரப்புரையில் ஈடுபடுவர். அந்தப் பரப்புரையில் இந்தக் கல்வியாண்டில் முக்கியமாக இடம் பெற்றிருந்த செய்தி அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ′செயல் வழிக் கற்றல்′ பற்றியதுதானாம். தனியார் ஆங்கிலப் பள்ளி ஆசிரியர்களும், மேலாண்மையினரும் ′செயல் வழிக் கற்றல்′ முறையின் நீள அகலங்களை தெளிவாக தெரிந்து வைத்துள்ளனராம். இம்முறையினால் மாணவர்களுக்கு ஏற்படும் இழப்புகளைப் பட்டியலிட்டு பெற்றோர்களிடம் பரப்புரை செய்கின்றனராம். இந்தப் பரப்புரைகளால் ஆங்கிலப் பள்ளிகளுக்கு பெருமளவு வெற்றியும் கிட்டியுள்ளதாம்.

′செயல் வழிக் கற்றல்′ நடைமுறைப்படுத்தப்பட்ட தொடக்கத்தில் குமரி மாவட்டத்தின் தலைநகரில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பெரும் போராட்டத்தில் இறங்கினர். தங்கள் குழந்தைகளுக்கு இந்தக் கல்வி முறை தேவையில்லை எனவும், தொடர்ந்து இம்முறையிலேயே கல்வி பயிற்றுவிக்கப்படுமாயின் தங்கள் குழந்தைகளுக்கு மாற்றுச் சான்றிதழை வழங்குமாறு கூறி போராட்டத்தைத் தொடர்ந்தனர். ஒரு வார காலஅளவில் நடைபெற்ற இப்போராட்டம், அப்போது பரவலாக கவனம் பெற்றது. தாளிகைகள் முன்னின்று போராட்டத்திற்கு ஆதரவாக பரப்புரை செய்தன. இறுதியில் கல்வி அதிகாரிகள் அப்பள்ளியில் முகாமிட்டனர். பெற்றோர்கள் பலவகைகளிலும் ′மூளைச் சலவை′ செய்யப்பட்டனர். இறுதியில் போராட்டம் வலுவிழந்துவிட்டது.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ‘அனைவருக்கும் கல்வித் திட்டம்’ அதன் தொடர்ச்சியான ′செயல்வழிக் கற்றல்′ முறை திருநெல்வேலி மாவட்டத்தில் முறையாக செயல்படவில்லை என்று தெரிகிறது. இம்மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளின் மேலாண்மையர் தங்கள் பள்ளிகளில் ′அனைவருக்கும் கல்வி இயக்க’த்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு நீதிமன்ற தடை ஆணை பெற்றுள்ளனராம். இதனால் நெல்லை மாவட்டத்தில் ′செயல் வழிக் கற்றல்′ பரவலாக செயல்படுத்தப் படவில்லை.

′செயல் வழிக் கற்றல்′ முறை பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படுவதை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதை மையப்படுத்தி ஆசிரியர் கழகங்கள் ஆர்ப்பாட்டம், உண்ணாநோன்பு என பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். இத்தகு போராட்டங்கள் மாவட்ட, வட்டத் தலைநகரங்களில் நாளும் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இந்தக் கல்வியாண்டில் தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கு இந்தச் ‘செயல் வழிக் கற்றல்’ முறையே காரணம் என்று கூறி அவர்கள் களமிறங்கியுள்ளனர். பள்ளியில் பாடப் புத்தகங்களின் துணையின்றி கற்றல் - கற்பித்தல் நடைபெறுவதால் பாடப் புத்தகங்கள் தேவையற்றதாகியுள்ளன. இம்முறையில் அட்டைகளை வைத்து மாணவர்கள் தாமே படித்துக் கொள்ள வேண்டியதுதானாம். இதனால் பெற்றோர்களிடத்தில் கடும் எதிர்ப்பு உருவாகி அவர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனராம்.

′செயல் வழிக் கற்றல்′ பற்றி ‘அனைவருக்கும் கல்வி இயக்க’த்தால் மிக அதிக அளவில் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இப்புதிய முறையினால் மாணவர்களின் பல்வேறு திறமைகள் வளர்த்தெடுக்கப்படுமாம்! தமிழகத்தில் மெளனமாக ஒரு கல்விப் புரட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம்! இந்தப் புரட்சி தமிழகத்தின் எதிர்காலத்தையே மாற்றப்போகிறதாம்!

பல்வேறு விவாதங்களையும், உரையாடல்களையும் ஏற்படுத்தியுள்ள இந்த ′செயல் வழிக் கற்றல்′ என்பது உண்மையில் என்ன? இத்திட்டம் எவ்வாறு உருபெற்றது? இது எவ்வாறு பயிற்றுவிக்கப்படுகிறது? இதனை நடைமுறைப்படுத்துவதன் நோக்கமென்ன? பள்ளிகளில் இதனை எப்படி நடைமுறைப் படுத்துகின்றனர்?

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்ட இயக்குநர் எம்.பி. விசயகுமார் இ.அ.ப. அவர்களின் சிந்தையில் உதித்த கனவுத் திட்டம்தான் ′செயல் வழிக் கற்றல்’. விசயகுமார் அவர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கொத்தடிமைகளாக இருந்த சிறார்கள் சிலரை மீட்டெடுத்திருக்கிறார். அச்சிறார்களுக்கு கல்வி சொல்லித் தர எண்ணியபோது அவர்கள் பள்ளி வயதைக் கடந்தவர்களாக இருந்தமையால் அவர்களுக்கென சிறப்புப் பள்ளிகள் உருவாக்கப்பட்டன. அவர்களுக்கு கற்றுத் தருவதற்கென சிறப்பான கற்றல் - கற்பித்தல் முறைகள் ஏற்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. விசயகுமார் அவர்கள் சென்னை மாநகராட்சி ஆணையராகியபோது வேலூர் அனுபவத்தை செயல்படுத்தும் களமாக மாநகராட்சிப் பள்ளிகளைப் பயன்படுத்திக் கொண்டார்.

′செயல் வழிக் கற்றல்’ அறிமுகம் செய்வதற்கு முன்பு நடைமுறையில் உள்ள கற்றல் கற்பித்தல் முறையில் மாணவர்கள் பெறும் அடைவுத் திறன் குறைவதற்கான காரணங்களை ஆய்வதற்கென ஒரு குழு உருவாக்கப்பட்டதாம். அந்தக்குழு பின்வரும் நோய்க் காரணிகளை பட்டியலிட்டதாம்.

Ø ஆசிரியரை மையப்படுத்திய வகுப்பறைகள்.
Ø அங்கொன்றும் இங்கொன்றுமாக பயன்படுத்தப்படும் கற்றல் கற்பித்தல் பொருள்கள்.
Ø விரிவுரை முறையிலேயே பெரும்பான்மை நேரங்களில் பாடம் நடத்துதல்.
Ø ஆசிரியர்கள் மட்டுமே அனைத்தும் அறிந்தவர்கள்; மாணவர்களுக்கு எதுவுமே தெரியாதவர்கள்.
Ø ஆசிரியர் – மாணவர் இடைவெளி.
Ø கற்றலை விட கற்பித்தலுக்கே முக்கியத்துவம்.
Ø மாணவர்கள் பள்ளிக்கு வருகை தராத நாள்களுக்கான பாடங்களைக் கற்க வழியற்ற நிலை.
Ø பழமையான/பாரம்பரியமான மதிப்பீட்டு முறைகள்.
Ø மகிழ்ச்சியைத் தராத இணைக் கல்விச் செயல்பாடுகள்.
Ø விளையாட்டுமுறை, செயல் வழிக் கற்றல் இல்லாத கல்வி.
Ø தானே கற்றல், இணைக்கற்றலுக்கு குறைவான வாய்ப்புகள்.
Ø கற்றல் செயல்பாடுகளுக்கு குறைவான வசதிகளையுடைய வகுப்பறைகள்.
Ø மாணவர்களைக் கவராத ஆழ்ந்த / முழுமையான கற்றலுக்கு உதவாத கற்பித்தல் கருவிகள்.
Ø சுதந்திரமற்ற கற்றல்.
Ø பெரும்பான்மை நேரம் வகுப்பிலேயே முடங்கியிருக்கும் சூழ்நிலை.

இத்தகு நோய்க்கூறுகளிலிருந்து விடுபடவேண்டுமாயின் அதற்குத் தகுந்ததொரு மாற்று தேவை. செயல் வழிக் கற்றல் முறையே தகுந்த மாற்று எனக் கொண்டு சென்னை மாநகராட்சியின் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் இப்புதிய கற்றல் முறை செயல்படுத்தப்பட்டதாம்.

நான்கு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், 26 ஆசிரியர்கள் உள்ளிட்ட குழுவினர் ஆந்திர மாநிலம் ரிசி பள்ளதாக்கு(Rishi Vally) பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். மூன்று முதல் நான்கு கட்ட பயிற்சியின் பயனாக இக்குழுவினரால் ′செயல் வழிக் கற்றல்′ என்ற புதிய கற்றல் முறை வடிவம் பெற்றது. இதற்கென தனிப் பயிற்சி கட்டகம் உருவாக்கப்பட்டது. இம்முறையில் ‘ரிசி பள்ளதாக்கு’ பட்டறிவுகள் அப்படியே பயன்படுத்தப்படாமல் தமிழகச் சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாம்.

ஆய்வு அடிப்படையில் இத்திட்டம் மாநகராட்சியின் 10 மண்டலங்களில் உள்ள 13 பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது நடைமுறையில் உள்ளதுபோல் அட்டைகள் எதுவும் அப்போது பயன்பாட்டில் இல்லாதால் புதிதாக உருவாக்கப்பட்டன. முதல் நிலையில் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகள் மட்டுமே ‘செயல் வழிக் கற்றல்’ முறைக்கு உட்படுத்தப்பட்டன. பின்னர் இது நான்காம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தின் வெற்றியால் ஏற்பட்ட ஊக்கத்தினால் சென்னை மாநாகராட்சியின் 264 பள்ளிகளிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாம்.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்ட இயக்குனராக திரு. விசயகுமார் அவர்கள் பொறுப்பேற்ற நிலையில் ‘செயல் வழிக் கற்றல்’ தமிழகத்தின் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

‘செயல் வழிக் கற்றல்’ முறையில் கற்பிக்கப்படுவதற்கென பாடங்கள் பல்வேறு பகுதிகளாக - அலகுகளாக பகுக்கப்பட்டு பல்வேறு செயல்பாடுகள் உள்ளதாக மாற்றப்பட்டுள்ளனவாம்.

Ø ஒவ்வொரு பகுதி/அலகும் ஒரு மைல்கல்(mile stone) என அழைக்கப்படும்.
Ø ஒவ்வொரு பாடமும், தொடர்புடைய மைல்கற்கள் தொடரியாக இணைக்கப்பட்டு, தொடரியாக இணைக்கப்பட்ட மைல்கற்கள் ஏணிப்படி(Ladder) என அழைக்கப்படும்.
Ø ஒவ்வொரு மைல்கல் நிலையிலும் வெவ்வேறு கற்றல் நிகழ்வுகளுக்காக அமைக்கப்படும் படிகள் குறியீடு(logo) என அழைக்கப்படும்.
Ø மைல்கற்கள் எளிமை(Simple)யிலிருந்து கடின(Complex)மானவற்றிற்குச் செல்வதாக அமைக்கப்பட்டிருக்கும்.
Ø மாணவர்கள் குழுக்களாக ஒருங்கிணைக்கப்பட்டு, குழு அட்டைகள் பயன்படுத்தப்பட்டு கற்றல் நிகழும்.
Ø இத்திட்டத்தில் மதிப்பீடு(Evaluation) உள்ளடங்கியுள்ளது. தனியான அட்டைகள்/ செயல்பாடுகள் இதற்கென பயன்படுத்தப்படும்.
Ø வலுவூட்டுதல்(reinforcement) நிகழ்வின்போது ஒவ்வொரு மாணவனுக்கும் தனித்தனி பயிற்சிப் புத்தகம் / பயிற்சித்தாள் வழங்கப்படும்.
Ø மாணவர்களின் முன்னேற்றம்(Progress) இறுதி மதிப்பீடு அட்டை(Annual Assessment Chart)யில் பதிவு செய்யப்படும்.
Ø ஒவ்வொரு மைல்கல்லும் பல்வேறு செயல்பாடுகளைக் கொண்டதாக அமைந்திருக்கும். அறிமுகம்(introduction), வலுவூட்டுதல்(reinforcement), பயிற்சி(practice), மதிப்பீடு(evaluation), குறைதீர்த்தல்(remedial), வளப்படுத்துதல்(enrichment) போன்ற செயல்கள் வெவ்வேறு குறியீடுகளாக(logo) பகுக்கப்பட்டிருக்கும்.

‘செயல் வழிக் கற்றல்’ நிகழ்வின் மூலம் பெறப்படும் பயன்களாக பின்வருவற்றைக் குறிப்பிடுகின்றனர்.

Ø மாணவர்கள் தங்களுக்குரிய வேகத்தில் கற்கிறார்கள்.
Ø தானே கற்றலுக்கு(Self Learning) அதிகமான நேரமும் ஆசிரியர் வழிகாட்டுதலுடன் கற்றலு (Teacher Directed Learning)க்கு குறைவான நேரமும் செலவிடப்படுதல்.
Ø குழுக்கற்றல், இணைக் கற்றல், தானே கற்றல் போன்ற செயல்களுக்கு ஊக்கமளித்தல்.
Ø ஆசிரியரின் கற்பித்தல் நேரம் வரையறுக்கப்பட்டு தேவையான மாணவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் கற்றுத்தரும் நிலை.
Ø கற்றலின் ஒவ்வொரு படிநிலையிலும் மாணவர்களின் பங்களிப்பு உறுதிப்படுத்தப்படுகிறது.
Ø உள்ளிணைந்த மதிப்பீட்டு முறை பின்பற்றப்படுவதால் மாணவர்களை அறியாமலே மதிப்பிடுதல் நிகழ்ந்துவிடல்.
Ø மாணவர்களின் தொடர் வருகையின்மை கவனப்படுத்தப்படல்.
Ø வகுப்பறைச் செயல்கள் மாணவர்களின் தேவை மற்றும் விருப்பம் சார்ந்து அமைந்திருந்தல்.
Ø மாணவர்களுக்கு கற்றல் செயலைத் தேர்ந்தெடுக்கும் உரிமை.
Ø பல்வகுப்புக் கற்றல்/பல்நிலைக் கற்றல் சிறப்பாக கவனப்படுத்தப்படல்.
Ø கவர்ச்சியான அட்டைகள்/செயல்பாடுகள் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டுதல்.
Ø படைப்பாற்றல் மற்றும் தொடர்பு கொள்ளும் திறன் வளர்தல்.
Ø குழுவாக வட்டமாக அமர்வதால் மாணவர்களின் பாதுகாப்பு அதிகமாவதை உணர்தல்.
Ø கற்றல் செயல்களை தேர்ந்தெடுக்க மாணவர்கள் வகுப்பினுள் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுதல்.
Ø ஆசிரியர் - மாணவர் இடைவெளி வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதோடு ஆசிரியர் உதவுபவராக செயல்படுகிறார்.

‘செயல் வழிக் கற்ற’லை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களாக கல்வியாளர்கள் பின்வருவனவற்றைக் கூறுகின்றனர்.

Ø அனைத்துப் பாடக் கருத்துகளையும் கொண்டு செல்ல இயலாமை.
Ø அனைத்து வகை மாணவர்களுக்கும் ஏற்ற தனித்தனிச் செயல்களை அமைக்க இயலாமை.
Ø பாடங்களைக் குறிப்பிட்ட கால அளவிற்குள் முடிக்க இயலாமை.
Ø மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கற்றலுக்கு அதிக நேரமாதல்.
Ø மெதுவாகக் கற்போருக்கு அதிக நேரம் செலவாதல்.
Ø அனைத்து மாணவர்களையும் கற்றலில் ஈடுபடச் செய்யாதிருத்தல்(குழுவாக செயல்படுவதால்).
Ø கருப்பொருள் கருத்துகளுக்கு(Abstract Concept) செயல்கள் அமைப்பதில் உள்ள இயலாமை.
Ø கற்றல் - கற்பித்தல் துணைக்கருவிகள் பயன்படுத்துவதில் ஏற்படும் தேக்கம்.
Ø ஒரே ஆசிரியர் எல்லா பாடங்களையும் மாணவர்களுக்கு வழங்குவதால் மாணவர்களுக்கும்/ ஆசிரியருக்கும் சலிப்பு ஏற்படுதல்.
Ø ஒரே வகுப்பில் மாணவர்கள் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் இருப்பதால் ஏற்படும் மனச்சோர்வு, சோம்பல் போன்ற எதிர்மறைச் சூழலினால் செயல்பட இயலாமை.
Ø ஒரு செயலை மாணவர்களுக்கு வழங்குவதிலிருந்து அதனை முடிக்கும் வரையிலும் தொடர்ந்து அறிவுரைகள் கொடுக்க வேண்டியுள்ளதால் ஆசிரியர் விரைவில் சோர்ந்து விடுதல்.
Ø ‘செயல் வழிக் கற்றல்’ முறையை செயல்படுத்துதல் தொடர்பாக ஆசிரியர் கவனம் மற்றும் சிந்தனை இயக்கம் கொள்வதால் ஓய்வு நேரத்திலும் பணிச் சுமை ஏற்படும் வாய்ப்பு; அதனால் ஏற்படும் மன உளைச்சல்.

மாணவர்கள் குறிப்பிட்டதொரு கற்றல் நிகழ்வில் தனியாகவோ, குழுவாகவோ முழுமையாகவோ ஈடுபட்டு அதனைச் செய்து பார்த்தோ, அதுபற்றி விவாதித்தோ, படங்கள் வரைந்தோ, தகவல் சேகரித்தோ, விளையாட்டின் மூலமோ, பகுத்தாய்ந்தோ, ஐம்புல உணர்வுகளின் வழியாகவோ, மகிழ்ச்சியான முறையில் நிலையான கற்றல் அனுபவத்தைப் பெறுவதே உண்மையில் ‘செயல் வழிக் கற்ற’லாகும். இக்கற்றல் மூலம் மாணவர்கள் பாடப் பொருளினைச் செயல் வடிவில் அறிந்து, புரிந்து, செய்து, பகுத்து, தொகுத்து, மதிப்பிட்டு அறிய முடியும்.

‘செயல் வழிக் கற்றல்’ என்பது முழுமையானதொரு கற்றல் - கற்பித்தல் வழிமுறையாக அமைத்துவிட முடியாது. பாடப் பொருள்களை கற்பிக்க/கற்க கல்வியாளர்கள் பல்வேறு கற்றல் - கற்பித்தல் முறைகளை பரிந்துரைக்கின்றனர். பல்வேறு வகையான கற்றல் - கற்பித்தல் முறைகள்/உத்திகள் தற்போது நடைமுறையில் உள்ளன. ஒரு வகுப்பிற்கென வரையறுக்கப்பட்டுள்ள கலைத் திட்டத்தில் உள்ள அனைத்து வகைப் பாடங்களையும் குறிப்பிட்டதொரு கற்றல் - கற்பித்தல் முறையில் மாணவனுக்கு வழங்கிவிட முடியாது. பாடப்பொருளின் தன்மை, அளவு, மாணவர்களின் மனநிலை போன்ற பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு கற்றல் - கற்பித்தல் முறையை ஆசிரியர் முடிவு செய்கிறார்.

அறிவியல் கணிதம் போன்ற பாடங்களில் உள்ள விதிகளைக் கற்பிப்பதற்கு ‘விதிவருமுறை’ ‘விதி விளக்கு முறை’ போன்ற கற்பித்தல் முறைகளே சிறந்ததாக அமையும். அறிவியல் பாடத்தில் காணப்படும் ஆய்வுகளை மாணவர்களுக்கு விளக்குவதற்கு ‘செய்துகாட்டல் முறை’ என்ற கற்பித்தல் உத்தி பயன்படுத்தப்படுகிறது. புதிய ஒரு அறிவியல் கருத்தை அறிமுகம் செய்வதற்கு ‘விரிவுரை முறை’யே சிறப்பானதொரு உத்தியாக அமையும். வரலாற்றுப் பாடத்தின் பல்வேறு பகுதிகளை விளங்கிக் கொள்வதற்கு ‘களப்பயணம்’ தேவைப்படலாம். அரசர்கள், ஆட்சியாளர்கள் தேசத் தலைவர்கள் போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதற்கு ‘நடிப்புமுறை’ சிறப்பாக பயன்படும். குளம் என்ற சூழ்நிலை மண்டலத்தை கற்பிக்க/கற்க ‘செயல்திட்டமுறை’ என்ற கற்றல் - கற்பித்தல் முறையை பயன்படுத்த வேண்டும். தொழிற்சாலைகளினால் ஏற்படும் நன்மை தீமைகளை அறிந்து கொள்வதற்கு ‘ஒப்படைப்பு முறை’ ஏற்புடையதாக அமையும். இதுபோன்று பாடப் பொருளின் தன்மைக்கு ஏற்ப கற்றல் கற்பித்தல் உத்திகளை பயன்படுத்திக் கொள்ளமுடியும்.

‘செயல் வழிக் கற்றல்’ என்பதன் உண்மைப் பொருளை உணர்ந்து இப்பயிற்று முறை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. மாணவர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு இப்பயிற்று முறை உருவாக்கப்பட்டுள்ளதா என்பதே நமக்கு எழும் வினா. உண்மையில் செயல்வழிக் கற்றல் என்பது வெறும் அட்டைகளைப் பயன்படுத்தி வகுப்பறையின் உள்ளே நிகழ்வதுதானா?

தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள 37ஆயிரத்து 486 அரசு, அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் ஏறக்குறைய 38இலக்கத்து 78ஆயிரம் மாணவ மாணவிகள் கல்வி பயிலுகின்றனர். இவர்களுக்காக ஆண்டுதோறும் ஏறக்குறைய ரூ.25 கோடி செலவில் இரண்டு கோடியே 5இலக்கம் பாடப் புத்தகங்கள் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தால் அச்சிடப்படுகின்றன. ‘செயல் வழிக் கற்றல்’ முறையில் அட்டைகளை பயன்படுத்திக் கற்பிக்கப்படுவதற்கு பாடப் புத்தகங்கள் தேவையில்லை என்ற நிலையே காணப்படுகிறது. சென்ற கல்வியாண்டிலே தமிழகம் முழுவதும் ‘செயல்வழிக் கற்றல்’ முறை நடைமுறையில் உள்ளதால் பாடப்புத்தகங்கள் பயன்பாட்டில் இல்லை. பின்னர் எதற்காக பாடப்புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன? 2008-2009ஆம் கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளதே! எதற்காக இந்தப் பண வீணடிப்பு?

‘செயல் வழிக் கற்றல்’ முறையில், பாடப் புத்தகம் கைவிடப்பட்டுள்ளதால் படிக்கும் திறன், எழுத்துப்பயிற்சி, மனப்பாடத்திறன், நூலறிவு, வீட்டுப்பாடம் ஆகியவை தேவையற்றதாக ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. பள்ளிகளில் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரே ஒரு திறனான மனப்பாடத்திறனும் இல்லாமல் செய்யும் இம்முயற்சி ஒரு திட்டமிட்ட நடவடிக்கையோ என்ற ஐயத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.

‘செயல் வழிக் கற்றல்’ முறை தேவை என ஏதேனும் கல்விக் குழு பரிந்துரை செய்துள்ளதா? கல்வியாளர்கள்/குழந்தை மனவியலாளர்கள் போன்றோர் ஆய்வுகள் மேற்கொண்டு இத்திட்டம் சிறந்ததென அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனரா? தமிழகத்தில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் உலகின் எங்கேனும் அல்லது இந்தியாவின் ஏதேனும் ஒரு மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளதா? எவருமே பரிந்துரைக்காத, எங்குமே செயல்படுத்தப்படாத ஒரு திட்டத்தின் மூலம் தமிழகக் குழந்தைகள் பரிசோதனை எலிகளாக ஆக்கப்பட்டுள்ளது ஏன்?

இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஓராண்டு ஆகிவிட்ட நிலையில் இதன் நிறைகுறைகள் ஆய்வு செய்யப்பட்டதா? கல்வியாளர்களின் கருத்துகள், திட்டத்தை செயல்படுத்தும் ஆசிரியர்களின் கருத்துகள் பெறப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டனவா?

′ஒரு தேசத்தின் எதிர்காலம் வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது′ என்று கோத்தாரி கல்விக் குழு குறிப்பிடுகிறது. எதிர்கால தமிழகத்தை வளர்த்தெடுக்கும் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் இப்புதிய பயிற்று முறை கல்வியினை ஒன்றுமில்லாததாக்கிவிடாதா? வெளி விசைகள் ஏதேனும் இதன் பின்னணியில் செயல்படுகிறதோ?

‘கணக்குப் பிள்ளைகளை உருவாக்கும் கல்வி முறை’ என்று கேலி பேசப்படும் மெக்காலே கல்வி முறைக்கு நாம் விடை கொடுக்க வேண்டியதும் மாற்று கல்வி முறைக்கு நாம் மாற வேண்டியதும் காலத்தின் கட்டாயம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் பல தலைமுறைகளாகப் பின்பற்றிய ஒரு கல்வி முறையிலிருந்து புதிய கல்வி முறைக்கு நாம் மாறும்போது அதுபற்றிய ஆழ்ந்த சிந்தனை, தொலைநோக்குப் பார்வை, முன் தயாரிப்புகள், அடிப்படைக் கட்டமைப்புகள் போன்றவை மிகத் தேவை. அரசின் நடவடிக்கைகளில் ஆர்வம் தெரிகிறதே தவிர நடைமுறைத் தெளிவு இல்லை. ′சமச்சீர்க் கல்வி′ நடைமுறைப்படுத்தப்படப்போவதாக அரசு ஒருபுறம் கூறிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டுக் கல்வித்துறை ‘செயல் வழிக் கற்றல்’ என்ற புதிய முறையை ‘அனைவருக்கும் கல்வி இயக்க’த்தின் மூலம் முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. கூறுபட்டும் வேறுபட்டும் கிடக்கும் தமிழகக் கல்விச் சூழலில் எதுவும் எப்போதும் நடக்கலாம்.

′விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்’ என்ற பாடல் வரிகளை ஏனோ முணுமுணுக்கத் தோன்றுகிறது.